கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா - புதுக்கோட்டை மீனவர்கள் மீன்பிடிக்க தடை
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா தொடங்குவதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகிலுள்ள கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடைபெறவுள்ளதையொட்டி பிப்ரவரி 17 முதல் 21 ஆம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கத்தடை விதித்துள்ளதாக மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
கச்சத்தீவிலுள்ள திருவிழாவில் பங்கேற்கச் செல்வோர் தமிழகத்தின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ராமேஸ்வரத்தில் பதிவு செய்து அனுமதி பெற்றபிறகே அங்கிருந்து படகு மூலம் செல்ல வேண்டும்.
இந்நிலையில் அனுமதியின்றி பிற பகுதிகளில் இருந்து மீனவர்களைப் பயன்படுத்தி படகுகள் மூலம் எவரேனும் பயணம் மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் பிப்ரவரி 17 முதல் 21 ஆம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.