தவறிழைத்து விட்டேன், மன்னியுங்கள் தாயே... ஜெ.விடம் 'மண்டியிட்ட' ராஜபக்சே!
கோவை: கடந்த வெள்ளியன்று இலங்கை பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளப் பக்கத்தில் தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை வேறு வகையில் திரித்து இழிவாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
மக்கள் பிரதிநிதியான முதல்வரைக் குறித்து பெண் என்றும் பாராமல் இவ்வாறு தரக்குறைவாக கட்டுரை வெளியிட்ட இலங்கைக்கு எதிராக கண்டங்களும், எதிர்ப்பும் வலுத்தது.
கண்டனம்...
இது தொடர்பாக இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார். இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் மூலமாக தனது எதிர்ப்பை பதிவு செய்தது மத்திய அரசு.
பகிரங்க மன்னிப்பு...
அதன் தொடர்ச்சியாக கட்டுரையை நீக்கிய இலங்கை பாதுகாப்புத் துறை, தவறுதலாக அக்கட்டுரெ பிரசுரமானதாக மோடியிடமும், ஜெயலலிதாவிடமும் மன்னிப்புக் கோரியது.
தொடரும் கண்டனம்...
இக்கட்டுரை தொடர்பாக இலங்கை அடிபணிந்த போதும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பட்டு விட்டதாக கண்டனங்கள் தொடரத் தான் செய்கிறது.
சுவரொட்டிகள்...
அந்தவகையில், கோவை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை உண்டாக்கியுள்ளன. அந்த சுவரொட்டிகள் தமது கரங்களை கூப்பிய நிலையில் ஜெயலலிதா முன்னால் மண்டியிட்டு மகிந்த ராஜபக்ச மன்னிப்பு கோருவதைப் போன்று அமைந்துள்ளன.
மன்னித்து விடுங்கள் தாயே...
மேலும், அதில் "தாயே என்னை மன்னித்து விடுங்கள் நான் பிழை செய்துவிட்டேன்;" என இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கோருவதைப் போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.