ரயில் நிலையங்களில் தபால்களை இனி பேட்டரி கார் சுமந்து செல்லும்!
சென்னை: இந்திய தபால் துறையில் சார்பில் புதிய அறிமுகம் ஒன்று நாளை சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது. அதுதான் தபால் மூடைகளை எடுத்துக் கொண்டு போக உதவும் பேட்டரி கார் ஆகும்.
நாடு முழுவதும் மெயில் தினம் அதாவது தபால் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில், தபால் மூடைகளை கையாளுவதற்கான பேட்டரி கார் அறிமுக விழா நடைபெறுகிறது.
இதுவரை தபால் மூடைகளை டிராலியில் வைத்து தள்ளி எடுத்துச் செல்வார்கள். அதை மாற்றி பேட்டரி பொருத்தப்பட்ட வாகனத்தை தபால் துறை அறிமுகப்படுத்துகிறது. முதலில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் நாளை இதை அறிமுகப்படுத்துகின்றனர். தொடர்ந்து எழும்பூர் மற்றும் தமிழகத்தின் இதர ரயில் நிலையங்களிலும் இந்த பேட்டரி வாகனம் அறிமுகமாகவுள்ளது.
சென்டிரல் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் நாளை முற்பகல் 11 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் பி.கே.மிஸ்ரா கலந்து கொண்டு பேட்டரி காரைத் தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வட்ட தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் டி.மூர்த்தி, தெற்கு ரயில்வே முதுநிலை கோட்ட கமர்ஷியல் மேலாளர் ஜி. காயத்ரி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.