சட்டசபை தேர்தலில் திருமாவளவன் தோற்க 'பெல்ட்' காரணமா?
சென்னை: சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணம் என்ன என்று யோசித்தபோது, சுயேச்சைக்கு ஒதுக்கப்பட்டிருந்த பெல்ட் சின்னம்தான் என்பது ஏகோபித்த கருத்தாக வெளியே வந்துள்ளது.
இதுகுறித்து திருமாவளவன் வார இதழ் ஒன்றிடம் கூறுகையில், ஒரு பைசா கூட வாங்காமல் எனக்கு 48 ஆயிரத்து 363 பேர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு வாக்கும் தூய்மையான, ஊழல் கறைபடாத வாக்கு. அந்த தூய உள்ளங்களுக்கு நன்றி கூறுவது எனது கடமை என்தால் மக்களுக்கு நன்றி சொல்ல மூன்று நாட்கள் முகாமிட உள்ளேன்.
மூவாயிரம் கோடி
நடைபெற்று முடிந்தது ஒரு சட்டவிரோத தேர்தல். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மூவாயிரம் கோடியை வாரியிறைத்து, மக்களை விலைக்கு வாங்கி சட்டசபைக்கு சென்றுள்ளன. இது அவர்களுக்கே நியாயமான மகிழ்ச்சியைத் தரக்கூடிய வெற்றியில்லை.
தப்பு செய்துவிட்டோம்
இந்தத் தேர்தலில் மோதிரம் சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்வு செய்தது நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு. மோதிரம் போலவே தோற்றமளிக்கும் பெல்ட் சின்னம், கடந்த லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் 18 ஆயிரம் வாக்குகள் வாங்கியது.
அலட்சியம்
மோதிரத்துக்கு வாக்களிக்க நினைப்போர், சின்னம் புரியாமல் பெல்ட் சின்னத்தில் குத்திவிடுகிறார்கள். அது தெரிந்தும் நாங்கள் அலட்சியமாக இருந்துவிட்டோம்.
பெல்ட் ஓட்டு
சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளிலும் பெல்ட் சின்னம் மூவாயிரம், நாலாயிரம் வாக்குகள் பெற்றுள்ளது. இவையெல்லாம் விடுதலை சிறுத்தைகளின் மோதிரச் சின்னத்திற்கு விழுந்திருக்க வேண்டிய வாக்குகள். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
ஊழலாவது, மது விலக்காவது
ஊழலை ஒழிப்போம், மதுக்கடைகளை மூடுவோம் என்ற உங்கள் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லையே என்ற கேள்விக்கு, சிரித்தபடியே பதிலளித்த திருமா, இவற்றை வலியுறுத்தாமல் விட்டிருந்தால், ஒருவேளை நாங்கள் வென்றிருக்கலாம் என்றுகூட தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.