இன்று பாரத் பந்த்! நாடு முழுவதும் ஆட்டோ, டாக்சிகள் ஓடாது.. வங்கிகள் இயங்காது!
சென்னை: மத்திய அரசு கொண்டுவர உள்ள சில சட்ட திருத்தங்களை எதிர்த்து தொழிற்சங்கங்கள் இன்று நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் கால் டாக்சி, ஆட்டோக்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ்போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்படும்.

தொழிலாளர் சட்டம், சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் போன்ற சில சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.
சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி 11 தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 2ம் தேதி பாரத் பந்த் நடத்த அழைப்புவிடுத்துள்ளன. முன்னதாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து இந்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், தொழில்சங்கங்களின் 12 அம்ச கோரிக்கைகளில் 8 கோரிக்கைகள் வரை ஏற்க அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
இதனிடையே இன்று நடைபெறும் பந்த்துக்கு தங்கள் முழு ஆதரவு இருப்பதாக சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எம்எஸ், ஐஎன்டியுசி உள்ளிட்ட தமிழகத்தின் 12 ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்த நகரத்திலும் இன்று ஆட்டோக்கள் ஓடாது.
அதேபோல, இந்த வேலைநிறுத்தத்தில், தமிழகத்தில் ஷேர் ஆட்டோ, டாக்சி, கால்டாக்சி உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
இதேபோல பெங்களூர் நகரிலும் ஆட்டோக்கள், டாக்சிகள் இன்று ஓடாது. அரசு பஸ் போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால், பெங்களூர் நகரில் பொதுப்போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துவிடும். பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இ-மெயில் தகவலில், செப்டம்பர் 2ம் தேதி சொந்த வாகனங்களை பயன்படுத்துவோர் அலுவலகம் வரலாம், அல்லது, வீட்டில் இருந்தபடி வேலை பார்க்கலாம் என்று சலுகை வழங்கியுள்ளது.
கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், திருப்பூர், ஈரோடு போன்ற தமிழகத்தின் பல நகரங்களிலும் இன்று வேலை நிறுத்த பாதிப்பு எதிரொலிக்கும் என்று தெரிகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால் காசோலை மற்றும் வங்கி பரிமாற்றங்கள் பாதிக்கப்படும். ஆனால், ஏடிஎம் மற்றும் இணையதள வங்கி சேவை பாதிக்கப்படாது.
1991ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் 16வது பாரத் பந்த் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications