காவிரி விவகாரம்.. மத்திய அரசின் மெளனப் போக்கு வருத்தமளிக்கிறது - பாரதிராஜா
சென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களும், தமிழக வாகனங்களுக்கு தீயிடும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டும் வரும் கர்நாடக அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய கர்நாடக அமைப்பினர் செய்யும் கொலைவெறித் தாக்குதல் மிகவும் கண்டனத்திற்குரியது என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் மீதும், தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கடந்த ஒரு வாரமாக நிலவிவரும் பதற்றத்தையும் பார்த்தும், மெளனத்தைக் கடைபிடிக்கும் மத்திய அரசின் போக்கு மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. மத்திய அரசு இதில் தலையிட்டு இந்த விவகாரத்தில் நிரந்தரமான முடிவை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் தலைவர்கள் கட்சி சார்பற்று இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தமிழகத்திலேயே தமிழர்கள் சிறுபான்மையினர் ஆகியிருக்கிறார்களா என்னும் அச்சம் நிலவுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பும், வன்முறை கட்டுக்கடங்காமல் சென்று, கர்நாடகத்தில் தமிழர்கள் மிகவும் துயருற்றிருக்கிறார்கள்.
சுதந்திரப் போராட்டத்தில் மிக அதிகமாக பங்கெடுத்தவர்கள் தமிழர்கள். அத்தகைய தமிழர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு, மிக விரைவாக அளிக்கப்படவேண்டும். ஆஃப்பிரிக்காவில், காந்தியைக் கொல்ல சதி நடந்தபோது, ஒரு தமிழர் தனது நெஞ்சில் குண்டைத் தாங்கி காந்தியைக் காப்பாற்றினார். இன்னொரு ஜென்மம் இருந்தால், நான் தமிழனாக பிறக்கவேண்டும் என்று அந்நேரத்தில் பெருமையுடன் சொன்னவர் காந்தி.
சமீபத்தில், ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, நாம் சோகத்தில் மூழ்கியிருந்தபோது, மரம் வெட்டியதாக 20 தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், தமிழர்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கும் இந்த நாட்டில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமோ என சந்தேகிக்க வேண்டியதாக உள்ளது.
500 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையைப் போன்று, தமது பகுதியை தாமே ஆண்டுகொள்ளும் முடிவை தமிழ் இளைஞர்கள் எடுப்பதற்கு முன்பாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய முடிவை எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.