பாரதிராஜாவின் கேள்விகளுக்கு தலைவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
சென்னை: முல்லைப் பெரியாறு பரம்பிக்குளம் அணை பிரச்னையில் எங்கள் தமிழர்களைத் தாக்குவதும் தற்போது, காவிரி நதிநீர்ப் பிரச்னையில் எங்களது தமிழர்களின் கோடிக்கணக்கான உடைமைகளைச் சிதைத்தும், தமிழர்களை அடிப்பதும் என்பது நாங்கள் இந்த தேசத்தில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது என்று இயக்குநர் பாரதிராஜா வேதனையுடன் கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில் மெளனத்தைக் கடைபிடிக்கும் மத்திய அரசின் போக்கு வருத்தமளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரிப் பிரச்சினைக்காவும், ஈழத்தமிழர் பிரச்சினைக்காகவும் கடந்த காலங்களில் திரைத்துறையினரைத் திரட்டி மிகப்பெரிய போராட்டக்களங்களை முன்னெடுத்தவர் பாரதிராஜா. தற்போது திரையுலகமே காவிரிப் பிரச்சினையில் தலையிட விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கும் நிலையில் பாரதிராஜா காட்டமான அறிக்கை விடுத்துள்ளார்.
நெய்வேலி போராட்டம்
காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்துக்கு எதிராக கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி நெய்வேலியில் பாராதிராஜாவின் தலைமையில் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்ற மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்திற்குக் தண்ணீர் தராத கர்நாடகத்திற்கு மின்சாரம் தரக்கூடாது என்பது முக்கிய முழக்கமாக இருந்தது. அந்த போராட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. அதற்கு மறுநாள் அக்டோபர் 13ம் தேதி ரஜினிகாந்த் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
ராமேஸ்வரத்தில் பேரணி
இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், அவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும் நேற்று தமிழ் திரையுலகினர் 2008ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தினர். பாரதிராஜா தொடங்கிய இந்த பேரணியில் தமிழ் திரையுலகை சேர்ந்த ஏறக்குறைய அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்,விநியோகஸ்தர்கள்,திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பெப்ஸி தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ராமேஸ்வரத்தில் பாரதிராஜாவின் தலைமையில் இயக்குநர்கள் நடத்திய பேரணியில் பங்கேற்காத நடிகர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
எது இறையாண்மை
ராமேஸ்வரத்தில் பேசிய பாரதிராஜா, ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்துப் பேசினால் இறையாண்மை போயிடும் என்கின்றனர். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு காநாடக அமைச்சகம் எதிர்ப்பு தெரிவிப்பது இறையாண்மைக்கு எதிரானது இல்லையா? முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாய்; இது என்ன இறையாண்மை? என்று கேள்வி எழுப்பினார்.
காவிரி பிரச்சினை
தற்போது காவிரி நதிநீர் பிரச்சினையில் தற்போது அறிக்கை விட்டுள்ள பாராதிராஜா, வந்தாரை வாழவைக்கும் தமிழகமாகத்தான் இருக்கிறது. துண்டு துண்டாகக் கிடந்த தேசத்தை இணைத்தது ஒரு தலைவன். இணைந்த தேசத்தை சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவன் ஒரு தலைவன். வாங்கிய சுதந்திரத்தை வளமாக்குகிறோம் என வரிந்துகட்டி நிற்கும் இந்த நாட்டின் பலநூறு தலைவர்களே! தயவுசெய்து இந்தப் பிரச்னையில் ஒரு நல்ல தீர்வு காணுங்கள். கட்சி பேதமற்று, அரசியல் நோக்கமற்று இதில் தீர்வு காண வேண்டும். இது உங்கள் கையில் இருக்கிறது.
தமிழர்கள் மீதான தாக்குதல்
பீகார் வெள்ளமாக இருந்தாலும், குஜராத் பூகம்பமாக இருந்தாலும் இந்த தேசத்தில் முதன்முதலில் அள்ளிக்கொடுத்து தேசிய பாசத்தை வெளிக்காட்டியது எங்களது தமிழர்களே. சமீபத்தில், நடந்த இன அழிப்பில் ஒன்றரை லட்சம்பேரை இழந்து சொல்ல முடியாதளவுக்கு துயரத்தில் இருந்த சூழலில், மரம் வெட்ட வந்தவர்களைத் தண்டிக்கிறோம் என்ற பெயரில், ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றார்கள்.
அறிக்கையோடு நிறுத்திய பாரதிராஜா
முல்லைப் பெரியாறு பரம்பிக்குளம் அணை பிரச்னையில் எங்கள் தமிழர்களைத் தாக்குவதும் தற்போது, காவிரி நதிநீர்ப் பிரச்னையில் எங்களது தமிழர்களின் கோடிக்கணக்கான உடைமைகளைச் சிதைத்தும், தமிழர்களை அடிப்பதும் என்பது நாங்கள் இந்த தேசத்தில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. இந்திய அரசு, இதுவரை இந்தப் பிரச்னையில் தலையிடாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதோடு, 500 ஆண்டுகளுக்குமுன்பு இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு தேசிய இனங்களும் தனித்தனியாக தங்களைத் தாங்களே ஆண்டதுபோல், நாங்களே ஏன் எங்களை ஆண்டுக்கொள்ளக் கூடாது என்ற கேள்வியை எங்களது இளைஞர் மனதில் நீங்களே விதைத்துவிடாதீர்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பாரதிராஜா. கடந்த காலங்களில் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்த பாரதிராஜா, இம்முறை அறிக்கை, பேட்டியுடன் நிறுத்திக்கொண்டுள்ளார்.