அப்துல் கலாம் பிறந்தநாள் கொண்டாட்டம்: கலாம் நினைவு மண்டபம் கட்டும் பணி தொடங்கியது
சென்னை: மக்கள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 85வது பிறந்தநாளான இன்று, அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமேஸ்வரம் பேக்கரும்பில், நினைவு மண்டபம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கலாமின் சகோதரர், முகமது முத்துமீரான் மரைக்காயர், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன கூடுதல் இயக்குநர் வி.கே.சிங், கட்டுமான பொறியாளர் சீனிவாசலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேங்காய் உடைக்கப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.
இங்கு 5 ஏக்கர் பரப்பளவில், 50 கோடி செலவில் அமைய உள்ள இந்த நினைவகத்தில், அறிவுசார் மையம், நூலகம், பிரார்த்தனை மண்டபம் ஆகியவை அமைக்கப்பட இருக்கிறன. கலாமின் நினைவிடத்துக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பிரமுகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
விழுப்புரத்தில் நடந்த கலாம் பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி வாழ்த்தினர். அத்துடன் விழுப்புரம் கே.வி.ஆர்.நகர் முழுவதும் மரக்கன்றுகளை நட்டனர்.
மாணவர்களின் ஆதர்ச நாயகனான அப்துல் கலாமின் பிறந்தநாள், இன்று தமிழகத்தில் இந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்துல் கலாமின் புகைப்படங்களை வைத்து இளைஞர்கள் மலர் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.