சென்னை ரயிலில் ஜெர்மன் பெண் பலாத்காரம்: பீகார் வாலிபருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை: ஓடும் ரயிலில் வெளிநாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்த பீகார் இளைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 18 வயது பெண் லூசி (பெயர் மாற்றம்). அதே ரயிலில் பயணம் செய்த பீகார் வாலிபர் சதன்குமார் (28) என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தனக்கு ஜாமீன் வழங்க கோரி சதன்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை நீதிபதி நாகமுத்து விசாரித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது: ‘‘மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ரயிலில் பலாத்கார சம்பவமே நடைபெறவில்லை. ஏராளமான பயணிகள் இருக்கும் போது பலாத்காரம் என்பது சாத்தியமில்லை. இது பொய் வழக்கு என்று கூறியிருந்தார்.
ஒரு பெண் அதுவும் வெளி நாட்டைச் சேர்ந்தவர். தனது கற்புக்கு களங்கம் ஏற்படும் வகையில் பொய் புகார் கூறமாட்டார். இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அது புகார்தாரருக்கு குந்தகம் ஏற்படும்'' என்று தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 5ம் தேதி இதே வழக்கில் பீகார் வாலிபர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அங்கு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.