தென்காசி தொகுதியை மதிமுகவிற்கு விட்டுக்கொடுப்பதா? பாஜகவினர் அதிர்ச்சி
சென்னை: பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வுக்கு 14 தொகுதிகளை கொடுத்துள்ள பா.ஜ.க. 8 தொகுதிகளில் மட்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
கடந்த கால பாராளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை பா.ஜ.க. மிக குறைந்த தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது. கூட்டணியில் 3 பெரிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் கூட்டணி நலன் கருதி இந்த முடிவை பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பாஜக போட்டியிடும் தொகுதிகள்
தென் சென்னை, கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தஞ்சை, வேலூர் ஆகிய 8 தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் போட்டியிட தேர்வு செய்துள்ள 8 தொகுதிகள் பற்றி பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தி தோன்றி உள்ளது.
மதிமுகவிற்கு எந்த தொகுதி
விருதுநகரில் வைகோ, ஈரோட்டில் கணேச மூர்த்தி, காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா, ஸ்ரீபெரும் புதூரில் மாசிலாமணி, தேனியில் அழகுசுந்தரம், தென்காசியில் சதன் திருமலைக்குமார், தூத்துக்குடி யில் ஜோயல் என்பதுதான் ம.தி.மு.கவின் வேட்பாளர் லிஸ்ட்.
மதிமுகவின் ஓட்டு வங்கி
இதில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் இரண்டும்தான் பா.ம.க ஓட்டுவங்கி உள்ள தொகுதிகள். மற்ற ஐந்தும் பா.ம.க தயவின்றி தே.மு.தி.க., பா.ஜ.க பலத்தில் ம.தி.மு.க களம் காணும் தொகுதிகள்.
தென்காசி கிடைக்குமா?
ஒதுக்கப்பட்ட ஏழு தொகுதிகளில் 6 தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி தொகுதி கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய வைகோவே கூறியுள்ளார்.
பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி
இதனிடையே 4 வெற்றி வாய்ப்பு தொகுதிகளை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் வலியுறுத்தி கேட்டுப் பெற தவறி விட்டதாக பா.ஜ.க. தொண்டர்களிடம் ஆதங்கம் நிலவுகிறது.
பாஜகவின் வெற்றி வாய்ப்பு
ஸ்ரீபெரும்புதூர், சேலம், திருச்சி, தென்காசி, ஆகிய 4 தொகுதிகளே அந்த தொகுதிகளாகும். இதில் ஸ்ரீபெரும்புதூர், தென்காசி ஆகிய இரு தொகுதிகளும் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு 100 சதவீதம் உள்ள பிரகாசமான தொகுதிகளாகும்.
தமிழிசை சவுந்தரராஜன் வாய்ப்பு
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அந்த தொகுதியில் அவருக்கு கணிசமான செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
தொகுதிக்கு அறிமுகமானவர்
அது மட்டுமின்றி அவர் மண்டல பொறுப்பாளராக இருந்து பணியாற்றியவர் என்பதால், அந்த தொகுதியில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அவருக்கு நன்கு அறிமுகமானவர்கள். அந்தத் தொகுதியை ம.தி.மு.க.விடம் பா.ஜ.க. விட்டுக் கொடுத்து விட்டதாக தெரிகிறது.
தென்காசியும் பறிபோய்விடுமோ?
அதேபோல ம.தி.மு.க.விடம் பா.ஜ.க. இழந்துள்ள மற்றொரு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி தென்காசி. தென் மாவட்டங்களில் கன்னியாகுமரியையும் விட இந்த தொகுதியில்தான் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகம். தென்காசி தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் இந்து அமைப்புகள் மிக, மிக வலுவாக உள்ளதாக கூறப்படுகிறது.
அய்யா வழி பாடகருக்கு வாய்ப்பு
அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் பிரபல அய்யா வழி பாடகர் சிவச்சந்திரன் போட்டியிடுவார் என்ற பேச்சு கடந்த 4 மாதமாக இருந்தது.
தென்காசி தொகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மேடைகளில் ஏறி அய்யா வழியின் அற்புதங்களை சிவச்சந்திரன் கூறியுள்ளார். இதனால் அந்த தொகுதி முழுக்க அவருக்கு ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவினர் விளம்பரம்
பா.ஜ.க. சார்பில் சிவச்சந்திரன் போட்டியிடுவார் என்பதை அறிந்து அந்த தொகுதியின் பல இடங்களில் சிவச்சந்திரன் பெயரை எழுதி சுவர் விளம்பரங்கள் கூட செய்து விட்டனர். ஆனால் அந்த தொகுதியை ம.தி.மு.க.வுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதை அறிந்து தென்காசி தொகுதி பா.ஜ.க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலமும் பறிபோனது
பா.ஜ.க மூத்த தலைவர்கள் விட்டுக்கொடுத்துள்ள அடுத்த 2 வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் சேலம், திருச்சி. இதில் ஒன்று பாமகவிற்கும், மற்றொன்று தேமுதிகவிற்கும் விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வெற்றி வாய்ப்புள்ள 4 தொகுதிகளும் கூட்டணிக் கட்சியினர் வசம் சென்றதை அறிந்து பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனராம்.
பாஜகவில் உள்குத்து இருக்குமோ
பா.ஜ.கவுக் குள் நடந்த உள்குத்து காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பா.ஜ.க. தொண்டர்களிடம் விரக்தியாக ஏற்பட்டுள்ளது.
ஏன் கொடுத்தார்கள்
தென்சென்னை, கன்னியாகுமரி, கோவை ஆகிய 3 தொகுதிகளையும் தொடக்கத்தில் இருந்தே விட்டு விடாமல் பார்த்துக் கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள், ஸ்ரீபெரும்புதூர், தென்காசி தொகுதிகளை விட்டுக் கொடுத்தது ஏன் புரியாமல் தவிக்கின்றனர் பாஜக தொண்டர்கள்.