அமித் ஷாவிடம் அனுமதி வாங்கிய தமிழிசை.. அ.தி.மு.க அரசை பாஜக விளாசும் பின்னணி
டெல்லியின் அனுமதியுடன் தமிழக அரசை விளாசுகிறது பாஜக.
சென்னை: அதிமுக அரசை மிகக் கடுமையாக பாஜக விமர்சிக்கிறது; அதிமுகவும் பாஜகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.
ஓபிஎஸ் பேசுவதை எல்லாம் டெல்லி பா.ஜ.க நிர்வாகிகள் பொருட்படுத்தவில்லை. 'அதிமுகவை எதிர்த்தால்தான் உள்ளாட்சியில் வெல்ல முடியும்' என டெல்லியில் இருந்து கிரீன் சிக்னலை வாங்கிவிட்டார் தமிழிசை. இதன் எதிரொலி அரசியல் களத்தில் கேட்கத் தொடங்கிவிட்டது' என்கின்றனர் பா.ஜ.கவினர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக ஆட்சியாளர்கள் குறித்த தன்னுடைய நிலைப்பாட்டை டெல்லி மாற்றிக் கொண்டுவிட்டதாகப் பேசத் தொடங்கியுள்ளனர் பா.ஜ.கவினர். தேனியில் நடந்த கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், ' மோடி கூறியதால்தான் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தேன். அப்போதுகூட, 'அமைச்சர் பதவி வேண்டாம்' என்பதை உறுதியாக கூறினேன். பிரதமர்தான், 'அமைச்சரவையில் நான் இணைய வேண்டும்' எனக் கூறினார்' என வெளிப்படையாகத் தெரிவித்தார்.
பரஸ்பர மோதல்
இந்தக் கருத்துக்கள் தமிழக பா.ஜ.கவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. ' பழுத்த அரசியல்வாதியாக இருக்கும் பன்னீர்செல்வம் ஒன்றும் பச்சைக் குழந்தையல்ல. அரசியல்ரீதியாக எந்த முடிவும் எடுக்க வேண்டும் என்றால் அமித் ஷாதான் பேசுவார். மோடி பேசினார் என்ற கருத்தை ஏற்க முடியவில்லை' எனக் கொதித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். இதற்கு முன்னதாக, ' பயங்கரவாதிகளின் கூடாரமாகத் தமிழகம் மாறிவிட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதே அது தெளிவாகத் தெரிந்தது. மாவோயிஸ்ட்டுகளும் நக்சலைட்டுகளும் தமிழகத்தில் பயிற்சி எடுத்துவரும் நிலையில்தான் சூழ்நிலை உள்ளது. உளவுத்துறை அறிக்கை அளித்தும் ஆட்சியில் உள்ளவர்கள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை' எனக் கூறியிருந்தார் பொன்னார். ஆனால் பொன். ராதாகிருஷ்ணன் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்' என விமர்சித்தார் துணை முதல்வர்.
ஆர்கே நகர் தோல்வியால் அதிருப்தி
ஏன் இவ்வளவு வார்த்தைப் போர்கள்?' என்ற கேள்வியை தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் ஒருவரிடம் கேட்டோம். அ.தி.மு.கவில் தற்போதுள்ள நிர்வாகிகளால், தேர்தல் களத்தில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை டெல்லி ஏற்கவில்லை. தமிழகத்தில் வலுவாகக் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காகத்தான் பல விஷயங்களை பா.ஜ.க முன்னெடுத்தது. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிருந்தால், அ.தி.மு.கவுக்காக போட்டியிடவில்லை எனப் பேசுவார்கள் என்பதால்தான் களத்தில் தனியாகப் போராடினார் தமிழிசை. தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இதனால், கடுமையான கோபத்தில் இருந்தார் அமித் ஷா. ' சசிகலா குடும்பத்துக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைத்திருந்தால் ஓரளவுக்கு வாக்கு கிடைத்திருக்கும். நீங்கள் அப்படிச் செய்ய தவறிவிட்டீர்கள்' எனக் கோபத்தை வெளிப்படுத்தினார்.
பணத்தால் வென்ற தினகரன்
இதற்குப் பதில் கொடுத்த தமிழிசை, ' களச் சூழல் நமக்கு சாதகமாக அமையவில்லை. பணத்தால் வென்றுவிட்டனர். மிகுந்த நேர்மையோடு தேர்தலை எதிர்கொண்டோம். நான் மட்டும்தான் தேர்தல் பிரசாரம் செய்தேன். என் மீது புகார் கூறியவர்கள் யாரும் களத்துக்கே வரவில்லை' என விளக்கம் கொடுத்தார்.
அதிமுக எதிர்ப்பு அரசியல் வியூகம்
இந்நிலையில், 'செயல்படாத தலைவர்கள்' எனப் பொருள்படி ட்விட்டரில் கருத்து ஒன்றைத் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. இந்தக் கருத்துக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் கொதித்தாலும், அதிகாரத்தில் இருந்தவர்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆடிட்டர் கோபம்தான் பல ரூபங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது" என விவரித்தவர், " உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தமிழிசை. இதுகுறித்து அமித் ஷாவிடம் பேசியவர், ' அ.தி.மு.க அரசை நாம்தான் இயக்குகிறோம் என்ற பேச்சு மக்கள் மத்தியில் உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர் பேசுகின்றனர். இப்படிப் பேசுவதால் நம்முடைய வெற்றி வாய்ப்புதான் பாதிக்கும். இந்த அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கும்போது, மக்கள் மத்தியில் அது தாமரைக்கான வாக்குகளாக மாறும். எதிர்ப்பு அரசியல்தான் நம்மை நிலைநிறுத்தும்' எனக்கூற, 'அப்படியே செயல்படுங்கள். யாருக்கும் நாம் ஆதரவாக இல்லை. நம்முடைய வெற்றிதான் நமக்கு முக்கியம்' என உறுதியாகக் கூறிவிட்டார்.
பாஜகவின் கடும் விமர்சனம்
இந்த சிக்னலைத் தொடர்ந்தே அஸ்திரத்தை வேகமாக வீசத் தொடங்கியுள்ளனர் தமிழக பா.ஜ.கவினர். இதனை எதிர்பார்க்காத பன்னீர்செல்வம், ' மோடி கூறியதால்தான் இணைந்தேன்' என பா.ஜ.கவுக்கு செக் வைக்கிறார்" என்றார் விரிவாக.