சட்டசபைத் தேர்தல்: குட்டிக் கட்சிகளுடன் பேச குழு அமைத்த பாஜக.. பெரிய கட்சிகளுடன் பேச இன்னொரு குழு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. சிறிய கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச ஒரு குழுவையும், பெரிய கட்சிகளுடன் பேச ஒரு குழுவையும் அது அமைத்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்க பல கட்சிகளும் முட்டி மோதிக் கொண்டுள்ளன. சொல்லி வைத்தது போல திமுகவும், பாஜகவும், தேமுதிகவை போட்டுத் தாங்கிக் கொண்டுள்ளன. அக்கட்சியோ அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது.
மறுபக்கம் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியும் கூட விஜயகாந்த்தை வலை வீசி இழுக்க முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் பாஜக இரு தேர்தல் குழுக்களை அமைத்துள்ளது.
இல.கணேசன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகிய 3 பேர் கொண்ட குழு கொங்குநாடு மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது.
அதேபோல தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேசுவதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரை உள்ளடக்கிய இன்னொரு குழுவையும் அமைத்துள்ளனர்.