பாமக போனா போகட்டும்.. "டோணி" மாதிரியே பேசும் பொன். ராதா!
சென்னை: கூட்டணியிலிருந்து பாமக விலகினால் கவலை இல்லை. அதனால் பாஜக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று மிகவும் "கூலாக" கூறியுள்ளார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.
பாஜக கூட்டணி தமிழகத்தில் கலகலக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு அணிகள் மாறும் வகையில் சில பல கட்சிகள் அங்குமிங்குமாக இப்போதே நெளிய ஆரம்பித்துள்ளன.
முதலில் மதிமுக பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பாஜகவின் எச்.ராஜா மிகக் கடுமையாகவும், மிரட்டும் வகையிலும், கீழ்த்தரமாகவும் விமர்சித்த காரணத்தால் மதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது.
இந்த நிலையில் அடுத்து பாமக வெளியேறும் போலத் தெரிகிறது. பாமக பொதுக்குழுவில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதேபோல தேமுதிகவும் கூட பாஜக தரப்பு மீது சற்று கடுப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. தான் கூட்டணியில் இருக்கும் நிலையில் ரஜினி மீது பாஜக ஓவர் பாசம் காட்டி அவரை இழக்க கடுமையாக முயன்றது விஜயகாந்த்துக்குப் பிடிக்கவில்லையாம். இருப்பினும் வழக்கம் போல தேமுதிக அவசரமே படாமல், ஆற அமர்ந்தே இதுதொடர்பாக முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் பாமக வெளியேறுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பொன் ராதாகிருஷ்ணன், பாமக வெளியேறினாலும் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படாது, பாதிப்பு வராது என்று பொளேர் என்று பதிலளித்துள்ளார்.
இதன் மூலம் பாமக வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதை தடுக்க பாஜகவும் முயலாது என்பதும் உறுதியாகியுள்ளது.