மோடி வருகையால் உற்சாகமடைந்த தமிழக பாஜக: 12 தொகுதிகளில் போட்டியிட இலக்கு
சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு 28 இடங்கள் ஒதுக்கியது போக மீதமுள்ள 12 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் முக்கியமாக சென்னையில் தென்சென்னை, வடசென்னையை பாஜக குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் திருச்சி, சென்னையில் நடைபெற்ற கூட்டங்களில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பங்கேற்றார். இந்த கூட்டங்களில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடினர். தமிழகத்தில் நிலையான இடத்தை பெறாத பாஜக வருகிற மக்களவைத் தேர்தல் மூலம் நிலையான இடத்தை பிடிக்கவும், குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி வாகை சூடவும் திட்டமிட்டுள்ளது.
இதற்கு மோடியின் அலையை பயன்படுத்தி, தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த தமிழக பாரதீய ஜனதா தலைவர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்காக பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் ஆராயப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும்
சமீபத்தில் தமிழகம் முழுவதும் வீடுதோறும் சென்று வாஜ்பாய் ஆட்சியின் திட்டங்கள், நரேந்திரமோடியின் செயல் திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் மேற்கொண்டனர்.
12 தொகுதிகளுக்கு குறி
இதில், வரவேற்பு அதிகமாக இருந்த மாவட்டங்களில் பா.ஜனதா போட்டியிட தீர்மானித்துள்ளது. அதன்படி 12 தொகுதிகளை பா.ஜனதா தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் 2 தொகுதிகள்
பாஜகவிற்கு தென்சென்னை, வடசென்னையில் ஏற்கனவே வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. அதேபோல கன்னியாகுமரி,திருச்சி, ஸ்ரீபெரும்புதூர், வேலூர்,கோவை,தென்காசி,திருநெல்வேலி,சேலம்,பொள்ளாச்சி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளதாம்.
வேட்பாளர்கள் யார்? யார்?
இந்த 12 தொகுதிகளிலும் யார்? யார்? போட்டியிடலாம் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் கன்னியாகுமரி, தென்காசி, கோவை, திருச்சி ஆகிய தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. ஆகவே எக்காரணத்தை கொண்டு இந்த தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்க அந்த கட்சி விரும்பவில்லை. இந்த தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை கண்டிப்பாக நிறுத்தவும் முடிவு செய்துள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு 28
பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்காக 28 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. இதில் ம.தி.மு.க.வுக்கு 6 இடங்களும், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட உள்ளது.
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள்
தே.மு.தி.க. கூட்டணியில் இணைந்தால் அந்த கட்சிக்கு 10 தொகுதிகளும், பா.ம.க.விற்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
திருப்பூரை தவிர்த்த பாஜக
பிற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் பேச்சுக்கேற்ப மாற்றிக்கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறது. அதேசமயம் திருப்பூர் தொகுதியை கொங்கு கட்சிக்கு ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல நாமக்கல் தொகுதியை கொங்கு கட்சிக்கும் புதிய நீதிக்கட்சிக்கு ஆரணி, திருவண்ணாமலை தொகுதியும் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகரில் மதிமுக
ம.தி.மு.க.வுக்கு விருதுநகர், ஈரோடு, கரூர், சிவகங்கை, தூத்துக்குடி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அதேசமயம் ஐஜேகே பாரிவேந்தர் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி தொகுதியை குறிவைத்துள்ளார். இந்த இரண்டு தொகுதிகளில் பாமக ஏற்கனவே வேட்பாளரையே அறிவித்து தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டது. ஆகவே தே.மு.தி.க. அல்லது பா.ம.க.வின் முடிவுவை பொறுத்து கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடு விவரமும் விரைவில் அறிவிக்க பாரதீய ஜனதா திட்டமிட்டு இருக்கிறது.
கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன்
ஒரு கட்சியை தவிர மற்ற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணியை இறுதி செய்து விட்டோம் என்று சென்னையில் நரேந்திரமோடி பங்கேற்ற கூட்டத்தில் இல.கணேசன் தெரிவித்திருந்தார். தொகுதி பங்கீடு முடிந்ததும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நரேந்திரமோடி பங்கேற்கும் ஒரு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்ய பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து மேடையில் தோன்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.