விவசாயிகள், நெடுவாசல் போராட்டங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக தலைவர்கள்!
தமிழக விவசாயிகள், நெடுவாசல் போராட்டங்களை பாஜகவைச் சேர்ந்த 3 முக்கிய தலைவர்கள் இழிவுப்படுத்தி பேசியுள்ளனர்.
சென்னை: டெல்லியில் விவசாயிகள் போராட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனை எதிர்த்து நிகழ்ந்த போராட்டம் ஆகியவற்றில் மக்களை 3 பாஜக தலைவர்கள் இழிவுப்படுத்தி பேசியுள்ளனர்.
இதிலிருந்து மத்திய அரசு மட்டும் இல்லை தமிழகத்தைச் சேர்ந்த இந்த பிரமுகர்களும் தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று தெரிகிறது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் 22 நாள்களாக போராடினர்.
அச்சமயம் அவர்களிடம் மத்திய அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் சமாதான பேச்சு நடத்தியும் எந்த பிரயோஜனமும் இல்லை.
இல.கணேசனின் பேச்சு
நெடுவாசல் மக்களிடம் சமாதானம் பேச வந்த எம்.பி. இல.கணேசன், மக்களுக்கான திட்டத்தை பூமியில்தான் கட்ட முடியும். ஆகாயத்திலா கட்ட முடியும். நாடு நன்றாக இருக்க ஒரு மாநிலம் தியாகம் செய்ய வேண்டும், மாநிலம் முன்னேற ஒரு மாவட்டம் தியாக செய்ய வேண்டும். எனவே இந்த நல்ல திட்டத்தை நெடுவாசலில் கொண்டு வந்தால் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் என்பதால் மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
பொன்னாரின் பொன்மொழிகள்
இதேபோல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பாதிக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்க இவர்கள் என்ன விஞ்ஞானிகளா? திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பே இப்படி எதிர்ப்பு தெரிவித்தால் திட்டத்தின் நன்மைகளை எப்படி புரிய வைக்க முடியும் என்று பேசினார்.
ஏமாற்றிய பிரதான்
இந்நிலையில் நெடுவாசல் மக்கள் இந்த திட்டத்தை புரிந்து கொள்ளும் வரை இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிவிட்டு நேற்றைய முன்தினம், நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு சார்பில் கையெழுத்திட்டார்.
விவசாயிகள் போராட்டம்
வறட்சி நிவாரணம், விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 15 நாள்களாக போராடி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழிசை
விவசாயிகளின் போராட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடாது. அவர்கள் தமிழக அரசைதான் எதிர்க்க வேண்டுமே தவிர மத்திய அரசை அல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பாஜகவினரே இப்படி செய்யலாமா?
தமிழர்களின் போராட்டத்தை மத்திய அரசிடம் எடுத்துரைக்கும் இடத்தில் இருக்கும் பாஜக, அதுவும் தமிழகத்தை சேர்ந்த பிரமுகர்கள் இப்படி தரக்குறைவாக பேசுவது முறையா? பாஜக அல்லாத அரசு செய்யும் தவறுகளை வாய்கிழிய சுட்டிக்காட்டும் தமிழிசையும், பொன்னாரும், இல.கணேசனும் இதுபோன்ற ஆட்சி, பதவி ஆதாயத்துக்காக மத்திய அரசின் பாராமுகத்தை தட்டு கேட்காமல் ஒத்து ஊதுவது சரியா?