குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்காக போராட்டம்.. எம்எல்ஏ காந்தி உண்ணாவிரதம்.. கைதால் பரபரப்பு
திருச்செந்தூர்: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ காந்தி கைது செய்யப்பட்டார்.
அம்மன் கோவில் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் இந்த கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.

மைசூருக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றது
இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் தசரா விழாவிற்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினத்தில்தான், தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

கோவில் திருவிழாக்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரமும் கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு பக்தர்களின்றி நடைபெற்றது. இந்த நிலையில்தான் இந்த வருடமும் இதுவரை கோவில் விழாக்கள் தடையை தமிழக அரசு தொடர்ந்து வருகிறது. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வு அறிவிப்புகளின்போது, கோவில் விழாக்களுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.

விரதம் ஆரம்பம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அக்டோபர் 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சூரசம்ஹாரம், தசராவின், 10ம் நாளான 15ம் தேதி இரவில் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, காளி, சிவன், பார்வதி, பிரம்மன், விஷ்ணு, நாராயணர், ராமர், லட்சுமணர், அனுமார் உள்ளிட்ட வேடங்களை அணியும் பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளனர். அவர்கள், குலசேகரன்பட்டினம் சிதம்பரேசுவரர் கோவில் கடற்கரையில் புனித நீராடி, துளசி மாலையை கடலில் நனைத்து, கோவில் முன்பு வந்து அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.

எம்எல்ஏ காந்தி கைது
தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா இது என்பதால் தசரா விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது பக்தர்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது. பாஜக மற்றும் இந்து அமைப்புகளும் இதை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் குலசேகரன்பட்டினம் அரசு பொது மருத்துவமனை அருகே பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ காந்தி கலந்துகொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போராட்ட களத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் இந்து அமைப்பினரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. எனவே, எம்எல்ஏ காந்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சிவமுருகன் ஆதித்தனும் கைது செய்யப்பட்டார். இதற்கு இந்து அமைப்பினர் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாருடன் வாக்குவாதம்
முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு தசரா திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டை போலவே தசரா திருவிழா நடைபெறும் என முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்துதான், தசரா திருவிழாவை வழக்கம்போல் நடத்தி பக்தர்களுக்கு அனுமதி வழங்க கோரி இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி இந்தப் போராட்டம் நடைபெற்றதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும், மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடும் என திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்சிங் தெரிவித்தார். இதனால் போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்துதான், போராட்டத்தில் ஈடுபட்ட நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications