வன்முறை பேச்சின் மறுபெயரே எச். ராஜாவா?
தமிழகத்தில் தாமரை மலரும் என்று சொல்லி வரும் பாஜகவை சேர்ந்த தேசிய செயலாளர் எச். ராஜா தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் விதமான கருத்துகளை பதிவிடுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.
Recommended Video

சென்னை : தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் என்று சொல்லி வரும் நிலையிலேயே அந்த கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா வன்முறை, மதவாதத்தை தூண்டும் கருத்துகளைப் பதிவிடுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் உடைத்து, சேர்த்து தனது சாணக்கியத்தனத்தை காட்டியது பாஜக. அதிமுக ஆட்சிக்கு பாஜக மறைமுக உதவியது என்றும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்ததற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்றும் அரசல் புரசலாக கருத்துகள் வலம் வந்தன.
பிரதமர் மோடி சொல்லி தான் அதிமுகவில் மீண்டும் இணைந்தேன் என்று ஓ.பன்னீர்செல்வமும் பகிரங்கமாக போட்டு உடைத்தார். தமிழகத்தில் பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க நினைக்கும் பாஜகவின் கனவு மட்டும் தவிடுபொடியாகிக் கொண்டு தான் வருகிறது.

மெர்சல் சர்ச்சையிலும் மத தூண்டுதல்
இந்நிலையில் அந்த கட்சியின் தேசிய செயலாளரான எச். ராஜா சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் சர்ச்சை கருத்துகளை வெளியிடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். மெர்சல் பட விவகாரத்தில் தேவையே இல்லாமல் நடிகர் விஜயின் மதப் பெயரை கூறி வீண் சர்ச்சைகளை உருவாக்கினார்.

பெரியார் மண்ணில் ஆன்மிக அரசியல்
இதே போன்று ரஜினி ஆன்மிக அரசியல் பயணத்தை அறிவித்த போதும் பெரியாரை கிண்டல் செய்யும் விதமாக கருத்தை பதிவிட்டார். ‛இது பெரியார் மண், பிள்ளையாரை உடைத்த மண், ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்ட மண், அடியே மீனாட்சி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி, கழட்டடி கள்ளி என்ற மண், தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண் ஆனால் இங்கு ஆன்மீக அரசியல். சபாஷ்' என்று அப்போது ட்வீட்டி இருந்தார்.

சாதி, மத சாயல் பூசும் ராஜா
தமிழகத்தில் நிகழும் சம்பவங்களுக்கு சாதி, மத சாயல் பூசி வன்முறையான கருத்துகளை அதற்கு பதிவிடுவதையே வழக்கமாக வைத்துள்ளார் எச். ராஜா. மீனாட்சி கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை காரணமாக வைத்து அரசிடம் இருந்து கோயில்களை கைப்பற்ற வேண்டும் என்று கூறினார்.

லெனின் சிலை அகற்றம்
இன்று திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு பொதுஉடைமைவாதிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரிபுராவில் லெனினின் சிலை அகற்றப்பட்டது என்னவோ வரலாற்று சாதனை என மார்தட்டிக் கொள்ளும் அளவிற்கு இன்று திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது, தமிழகத்தில் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

வேடிக்கையா பார்ப்பார்கள்?
லெனினுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார் எச். ராஜா, லெனின் ரஷ்ய புரட்சியாளர் என்பதால் வேண்டுமானால் அப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கலாம். ஆனால் பெரியாருக்கும், தமிழகத்திற்கு என்ன தொடர்பு என்று கேட்டுவிட முடியுமா? அல்லது பெண்ணியத்திற்காகவும், முற்போக்கு சிந்தனைகளுக்காகவும், மூட பழக்கவழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவருமான பெரியாரின் சிலையை உடைத்தால் அதனை பெரியார் வழித் தோன்றல்கள் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருப்பார்களா?

ஏன் நடவடிக்கை இல்லை
அரசியல் தலைவர், பாஜக மேலிடத்தில் செல்வாக்கு பெற்றவர் என்பதற்காக எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லி விடலாமா. இதில் நாளை உடைக்கப்படும் என்றால் நாளை அல்ல, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் எதிர்காலத்தில் இது நடக்கும் என்று விளக்கம் வேறு தரப்படுகிறதாம். வன்முறை பேச்சுகளைத் தூண்டும் இவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் பாயாமல் இருப்பது ஏன் என்ற ஆச்சரியமும் எழுகிறது.












Click it and Unblock the Notifications