இப்ப விஜயகாந்த் பேச்சைக் கேட்டால்... இப்படி சிந்திக்கிறதாம் பாஜக!
சென்னை: விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது சாத்தியமற்றது. அதைத் தவிர மற்ற "அனைத்தையும்" நிறைவேற்றித் தரத் தயார் என்று பாஜக கூறி விட்டதால்தான், ஜவடேகர் சந்திப்பை மரியாதை நிமித்தமானது என்று கூறி கட்டையைக் கொடுத்துள்ளதாம் தேமுதிக தலைமை.
திமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுடனும் ஒரே சமயத்தில் பேரம் பேசிக் கொண்டிருக்கிறது தேமுதிக. இதில் எந்தப் பேரம் படியும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர்.
பாஜகவிடம் ஒரு வகையான டிமாண்டையும், திமுகவிடம் இன்னொரு வகையான டிமாண்டையும் வைத்து "அரசியல் வியாபாரத்தில்" ஈடுபட்டிருக்கிறது தேமுதிக.
படியாத பேரம்
பாஜகவைப் பொறுத்தவரை விஜயகாந்த் கேட்கும் அனைத்தையும் செய்து தர, நிறைவேற்றித் தர தயாராக உள்ளனராம். ஆனால் விஜயகாந்த் கேட்கும் ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் ஏற்க மறுத்து வருகின்றனராம்.
முதல்வர் வேட்பாளர்
விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பு கூறி வருகிறதாம். ஆனால் இதை மட்டும் ஏற்க முடியாது என்று பாஜக தரப்பு கூறி வருகிறதாம்.
ஏன்...?
பாஜக ஒரு தேசியக் கட்சி. பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாநிலக் கட்சிகளுடன் அது கூட்டணி வைத்துள்ளது. எனவே இப்போது விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார், அதேபோல பிற மாநிலங்களிலும் கூட்டணிக் கட்சிகள் கேட்க ஆரம்பிக்கும். அது தங்களுக்குப் பாதகமாகி விடும் என்று பாஜக கூறி வருகிறதாம்.
தேமுதிக பிடிவாதம்
ஆனால் தனது பேரத்திலிருந்து சற்றும் இறங்கி வராமல் உள்ளதாம் பாஜக. முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை அறிவித்தே ஆக வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி வருகிறதாம்.
நெருக்கடி தர
மேலும் பாஜகவுக்கு நெருக்கடி தரும் வகையில்தான் கூட்டணி குறித்து ஜவடேகருடன் விலாவாரியாக பேசிய பிறகும் கூட அதை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தேமுதிக கூறி விட்டதாம்.
ஆனால் திமுகவுக்கு சிக்னல்!
அதேசமயம், இந்த அறிவிப்பானது, திமுகவுக்கான சிக்னலாகவும் பார்க்கப்படுகிறது. ஜவடேகர் வந்தால் என்ன, உங்களுக்கான கதவை நாங்கள் மூடவில்லை என்பதே அது.
கிட்டத்தட்ட உறுதி
திமுகவைப் பொறுத்தவரை தேமுதிக தரப்பு கேட்டவற்றில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவற்றைத் தர ஒப்புக் கொண்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆட்சி அதிகாரத்தில் பங்கைத் தவிர மற்றவை குறித்து தாராளமாக பேசலாம் என்று திமுக தரப்பு முதலிலேயே தெளிவாக கூறி விட்டதாம்.
பிராக்டிகலாக யோசித்துப் பார்த்த விஜயகாந்த்
முதலி்ல் என்ன இது இப்படி எடுத்த எடுப்பிலேயே கூறுகிறார்கள் என்று விஜயகாந்த் தரப்புக்குக் கோபம் வரத்தான் செய்ததாம். ஆனால் பிராக்டிகலாக யோசித்துப் பாருங்கள் என்று திமுக தரப்பிலேயே அதுகுறித்து விளக்கிக் கூறியதும் சரிதான் என்ற சமரசத்திற்கு வந்ததாம் தேமுதிக தரப்பு.
5ல் வரும்படியாக
விஜயகாந்த்துக்கு 5 என்ற எண்தான் ராசியாம். எனவே அந்த எண் வரும்படியான சீட்டைக் கேட்கிறதாம் தேமுதிக தரப்பு. அதில்தான் சற்று சிக்கல் நீடிக்கிறதாம். அதையும் கூட சரி செய்ய திமுக தரப்பு தயாராகி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
மற்ற "டிமாண்டுகள்"
இதுதவிர தேமுதிக கேட்ட மற்ற "டிமாண்டுகளையும்" நிறைவேற்றித் தர திமுக தரப்பு தயாராக இருக்கிறதாம். நிலைமை இப்படியே சீராகப் போனால் திமுக - தேமுதிக உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
பாஜகவையும் விட மனசில்லை
இருப்பினும் விஜயகாந்த் தரப்புக்கு பாஜகவையும் விட மனதில்லையாம். அதை விட முக்கியமாக பாஜகவைப் பகைத்துக் கொள்ள மனமில்லையாம். எனவே அந்தப் பக்கமும் ஒரு பார்வை பார்த்தபடிதான் இருக்கிறார்களாம்.
அமீத் ஷா வருகிறாராம்
திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அமீத் ஷா கலந்துகொள்ளவுள்ளார். அவரது வருகையின்போது பாஜக கூட்டணி இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.