தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைக்கு பாஜக காரணம் அல்ல... சொல்கிறார் வெங்கையா நாயுடு
ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியம், ஜல்லிக்கட்டு தடைக்கு பா.ஜ.க காரணம் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை: இந்தியா டுடே நடத்தும் இரண்டு நாள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இன்றைய மாநாட்டில் 6 மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் , தொழிலதிபர்கள், கலையுலக பிரபலங்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கலந்துரையாடலின் போது பல்வேறு கேள்விக்கள் கேட்கப்பட்டன. தமிழகத்தில் இன்றைய சூழ்நிலையில் பாஜகவின் நிலைப்பாடு பற்றி கேட்கப்பட்டது.
தமிழர்கள் புத்திசாலிகள்
ஜல்லிக்கட்டு பிரச்சினை, தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறதா? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பட்டன. இதற்கு பதிலளித்த வெங்கையா நாயுடு, தமிழர்கள் புத்திசாலித்தனமானவர்கள் என்று கூறினார்.
பாஜக காரணமல்ல
ஜல்லிக்கட்டு தடைக்கு பாஜக காரணமல்ல , இது தொடர்பாக நீதிமன்றத்தின் தலையீடு இருப்பதால் கருத்து கூற இயலாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஜல்லிக்கட்டு என்பது தமிழக பராம்பரியம் என்பது என்னுடைய தனிக்கருத்து. இது குறித்து மத்திய அரசு என்ன செய்ய இருக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் வெற்றிடம்
தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அந்த வெற்றிடத்தை பாஜக நிரப்பும் என்றார். மத்திய அரசு என்றைக்கும் தமிழக அரசின் நண்பன்தான். தமிழகம் வளர்ச்சி பெறும் மாநிலமாக உள்ளது. முதல்வர் பன்னீர் செல்வத்திடம் மத்திய அரசு மாநிலத்திற்கு தேவையான உதவியை செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கெனவே கூறி இருந்தார் அதே போல தேவையான உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.
உட்கட்சி விவகாரம்
ஓ.பன்னீர் செல்வம் தற்போது முதல்வராக இருக்கிறார். இவர் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர். ஜெயலலிதா இருந்த போதே அவர் முதல்வராக பணியாற்றியுள்ளார். சசிகலாவைப் பற்றியும், அவர் எப்படி செயல்படுவார் என்பது பற்றியும் தெரியாது. முதல்வராக யார் இருப்பார்கள் என்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம். அதில் என்றைக்கும் பாஜக தலையிடாது என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.