பாஜக ஆட்சிக்கு வரும்.. ஜெ. முதல்வராக வேண்டும்.. பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு!
சேலம்: தமிழக முதல்வராக ஜெயலலிதா விரைவில் பதவியேற்க வேண்டும் என்று கூறிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருண்ணன், தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் என உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி குழந்தைகளை வேலையில் அமர்த்த கூடாது என்பதை கடுமையாக எதிர்க்கிறது. குழந்தைகளை மற்ற பணிகளில் அமர்த்தி கொடுமைப்படுத்திட கூடாது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், எப்போதும் எதிர்ப்போம் என்றார்.

தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது என்று கூறிய அவர், குளச்சல் துறைமுகம் கொண்டுவரப்பட்டு இருந்தால் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்து இருக்கும். இந்த திட்டம் மூலம் தமிழகம் மிகப்பெரிய பயன் அடைய முடியும். குளச்சல் துறைமுகம் மேம்படுத்த ஒத்துழைப்பு தர தமிழக அரசை கேட்டு கொண்டிருப்பதாகவும், அவர்களும் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புவதாகவும் கூறினார். அதுபோல் கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்:
கேள்வி: மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் தமிழகத்தில் தாமதப்படுத்தப்படுவதாக கூறுகிறார்களே?
பொன்.ராதா: இந்தியா முழுவதும் முன்னேற வேண்டும் என பாஜக நினைத்து அதற்கான பணிகளில் இறங்கி உள்ளது. பிரதமரும் இந்தியா முன்னேற வேண்டும் என்று முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறார். நான் தமிழன் என்பதால் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக மாற வேண்டும் என எண்ணுகிறேன். திட்டங்கள் காலம் நீடிப்பதால் இழப்புக்கள் தான் அதிகம் ஏற்படும்.
கேள்வி : தமிழகத்தில் அனைத்து துறையும் ஸ்தம்பித்து உள்ளதாக கூறுகிறார்களே?

பொன். ராதா: முதல்வர் பொறுப்புக்கு அவர் வந்து சில மாதங்களே ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்தில் நல்லது நடக்க வேண்டும்.
கேள்வி: தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக கூறுகிறார்களே?
பொன்.ராதா: தமிழ்நாட்டில் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. 2016-ல் மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள்.
கேள்வி: அ.தி.மு.க, பொது செயலாளர் விடுதலை ஆகி உள்ளாரே?
பொன்.ராதா: ஊழலற்ற, நேர்மையான, திறமையான ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும். அதற்கு ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும். தற்போது துணிச்சல் மிக்க முதல்வர் தேவை.
கேள்வி: வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பாஜக கூட்டணி ஏற்படுமா?
பொன்.ராதா: அப்படி இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதுவரை நேர்மையான, திறமையான நல்ல முதல்வர் தேவை, இதை வைத்து அப்படி கூறுகிறேன்.
கேள்வி: நீங்கள் பேசும் போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அம்மா என்று கூறினீர்கள் அப்படி ஏன் கூறினீர்கள்?
பொன்.ராதா: கலைஞரை கலைஞர் என்றும், வை.கோபால்சாமியை வைகோ என்றும், பாமக நிறுவனரை டாக்டர் ஐயா என்றும் தான் அழைத்து வருகிறேன். இதுபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை அம்மா என்று தான் கூறுகிறேன். அதில் எந்த தவறும் இல்லை.
கேள்வி: பாஜகவில் தற்போது உள்ள கூட்டணி தொடருமா?
பொன்.ராதா: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் வெளியில் போகக்கூடாது என விரும்புகிறோம். எங்கள் கூட்டணியில் இன்னும் சிலர் சேருவார்கள். தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பதிலாக பாஜக ஆட்சிக்கு வரும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று போகிற போக்கில் நம்பிக்கையாக சொன்னார் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications