ஜெயலலிதாவின் பிரதமர் கனவு ஒருபோதும் நிறைவேறாது: விஜயகாந்த்
நெல்லை: எந்த காலத்திலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிரமதர் கனவு நிறைவேறாது என நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜயகாந்த் தெரிவித்தார்.
நெல்லை டவுன் வாகையடி முனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. மாறாக விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனையில் பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
இவர்களுக்கு கூட பல்வேறு வகையான பண பலன்களை வழங்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு கூட ஓன்றும் செய்ய முடியவில்லை.
அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடங்கி கிடக்கின்றன. அதிமுகவினர் ஏமாற்று பேர்வழிகள். அவர்களை நம்பி ஓட்டு போடாதீர்கள்.
மலிவு விலை உணவகத்தில் சாப்பாடு ரூ.5, இட்லி ரூ.1, தண்ணீர் பாட்டில் மட்டும் ரூ.10. சும்மா கொடுக்க வேண்டிய தண்ணீரை காசு கொடுத்து குடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா பிரதமர் கனவு காண்கிறார். இந்த பகல் கனவு ஒரு போதும் நிறைவேறாது.
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கப்படாமல் அப்படியே உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அப்படியே செயல்படுத்துவோம்.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டது. அது நமக்கு நல்ல பலன் அளித்தது. ஆகவே இந்தியாவில் லஞ்சம் இல்லாத ஆட்சி அமைய மோடி பிரதமராக வரவேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக, கொங்கு, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியாக உள்ளது. இதில் எங்களுக்குள் வேறுபாடின்றி பழகி வருகிறோம். தொண்டர்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.












Click it and Unblock the Notifications