அரசியல்வாதிகளுக்காக பெண் சடலம் மீது அமர்ந்து பூஜை.... பெரம்பலூர் மந்திரவாதிக்கு குண்டாஸ்....
அரசியல்வாதிகளுக்காக பெண் சடலத்தின் மீது அமர்ந்து பூஜை செய்த பெரம்பலூர் மந்திரவாதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மனிதசடலம், மண்டையோடுகளை வைத்து நிர்வாண பூஜை நடத்திய மந்திரவாதி கார்த்திக்கேயனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் எம்எம் நகரில் மந்திரவாதி கார்த்திகேயன்,32 வீட்டில் கடந்த 10ம் தேதி, அழுகிய நிலையில் பெண் சடலம், மனித மண்டை ஓடுகள், கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆவிகளுடன் பேசவும், தனது மாந்திரீக சக்தியை அதிகரிக்கவும், சடலத்தின் மீது நள்ளிரவில் அமர்ந்து கார்த்திகேயன் பூஜை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மந்திரவாதி கார்த்திகேயன், மனைவி நசீமா,28 ஆகியோரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர்.
பெண்ணின் சடலம் சென்னையைச் சேர்ந்த மாணவி அபிராமி உடல் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மயிலாப்பூரில் மயானத்தில் புதைக்கப்பட்ட அபிராமி உடலை தோண்டி எடுத்து விற்ற மயான ஊழியர்கள் தன்ராஜ், கார்த்திக் மற்றும் உடலை எடுத்து வந்து கார்த்திகேயனிடம் கொடுத்த அவரது நண்பர்கள் வினோத்குமார், சதீஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
மந்திராவாதி கார்த்திக்கேயன் பற்றி தோண்டத் தோண்ட பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன.
பெண் சடலம்
பெண் சடலத்தின் மீது அமர்ந்து 40 நாட்கள் பூஜை செய்தாராம் கார்த்திக்கேயன். ஆளும்கட்சி எம்எல்ஏவை அமைச்சராக்குவதற்காகவே இந்த பூஜையை ஸ்பெஷலாக செய்தாராம் கார்த்திக்கேயன். மயானத்தில் இருந்து சடலங்களை கடத்துவதற்காகவே மயான ஊழியர்களை வளைத்துள்ளார் கார்த்திக்கேயன்.
நிர்வாண பூஜை
நிர்வாண பூஜைகளும் நடத்தியுள்ளார். வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அகோர காளி பூஜை நடத்திய கார்த்திக்கேயனுக்கு வட இந்திய நடிகைகள், அரசியல்வாதிகளின் தொடர்பும் உண்டாம். அவர்களையும் சடலத்தின் மீது அமரவைத்து பூஜை செய்துள்ளானாம். பல நிர்வாண பூஜை சிடிக்களையும் கைப்பற்றியுள்ளனர் போலீசார்.
கடல்குதிரைகள்
கார்த்திக்கேயன் வீட்டில் இருந்து அழிந்து வரும் இனமான கடல் குதிரையும் கைப்பற்றியுள்ளனர். அதை ஆஸ்துமா நோய்க்காக பொடி செய்து சாப்பிட்டதாக விசாரணையில் கூறியுள்ளான். அழிந்துவரும் பாதுகாக்கப்பட வேண்டிய கடல்குதிரைகளை சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்ததால் வனத்துறைமூலம் கார்த்திகேயன், நசீமா ஆகியோர் மீதும் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குண்டர் சட்டம்
ஏற்கனவே கடந்தாண்டு ஆலத்தூர் அருகே உள்ள மருதடி மலையடிவாரத்தில் குடில் அமைத்து, மண்டை ஓடுகளுடன் மாந்திரீகம் செய்ததாக கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கலெக்டர் நந்தகுமார் உத்தரவின்படி கார்த்திகேயனை, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க பெரம்பலூர் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.