ப்ளூவேல் விபரீதம்: பொன்னேரி அருகே இளைஞர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை!
ப்ளூவேல் விளையாட்டால் பொன்னேரி அருகே பொறியியல் பட்டதாரி இளைஞர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்: பொன்னேரி அருகே அலமாதியில் பொறியியல் பட்டதாரி தினேஷ் (வயது 23) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ப்ளூவேல் விளையாட்டால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் ஆட்கொல்லி விளையாட்டாக விஸ்வரூபமெடுத்தது ப்ளூவேல். இந்தியாவிலும் இந்த ப்ளூவேல் விளையாட்டு மாணவர்களை, இளைஞர்களை பலி எடுக்க தொடங்கியது.
பின்னர் ப்ளூவேல் விளையாட்டு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அலமாதியில் தினேஷ் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவரது தந்தை கூறுகையில், கடந்த 10 நாட்களாக தினேஷ் செல்போனில் தொடர்ந்து விளையாடி வந்தார் என்றும் ப்ளூவேல் விளையாட்டால் தினேஷ் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.