தலைமைச் செயலகத்தில் தென்னை மரத்தில் வெடிகுண்டு?
சென்னை: தமிழகத்தின் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை... அது வெறும் வதந்தி என்று தெரியவந்ததை அடுத்து அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்
தமிழக அரசின் சார்பில் நாளை நடக்கும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள், புனித ஜார்ஜ் கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை 15-ந் தேதியன்று அங்கு சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட உள்ளன.

இதில் கலந்துகொள்வதற்காக போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து 15-ந் தேதி காலை 8.25 மணிக்கு காரில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புறப்படுகிறார். போர் நினைவுச் சின்னம் அருகே 8.35 மணிக்கு அவர் வருகிறார்.
அங்கிருந்து மோட்டார் சைக்கிள் புடைசூழ முதல்வர் ஜெயலலிதாவை காவல்துறையினர் ஜார்ஜ் கோட்டைக்கு அழைத்து வருவர். ஜார்ஜ் கோட்டை எதிரே ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வரவேற்பார்.
பின்னர் அங்கிருக்கும் முப்படை தளபதிகள், கடலோர காவற்படை அதிகாரி,டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.
பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் அங்கிருக்கும் மேடையில் இருந்தபடி, ஏற்றுக்கொள்வார். திறந்த ஜீப்பில் பயணித்து போலீஸ் அணிவகுப்பை முதல்வர் ஜெயலலிதா பார்வையிடுவார்.
காலை 8.56 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் ஏறி, கொடிக்கம்பத்தை 8.59 மணிக்கு அவர் வந்தடைவார். அங்கிருக்கும் தேசியக் கொடியை 9 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்து, மரியாதை செய்வார்.
அதைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் அவர் சுதந்திர தின உரையாற்றுவார். பின்னர், துணிச்சலான செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சேவை விருது, மகளிர் நலனுக்கான சிறந்த தொண்டாற்றிய விருது, சிறந்த உள்ளாட்சிக்கான விருது உள்ளிட்ட விருதுகளை உரியவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்குவார். பின்னர் விருது பெற்றவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.
இந்த நிகழ்ச்சிக்காக போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கோட்டை கொத்தளத்துக்கு எதிரே, அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு தனித்தனியாக இடவசதிகள், பந்தல் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தலைமைச் செயலகம் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இங்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்று பொறுத்தப்பட்டிருந்தது. இந்த மரத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து வெடி குண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் நடத்திய சோதனையில் முதலில் வெடி பொருட்கள் இருப்பதாக தெரிந்தது. தொடர்ந்து மேல்மட்ட என்டோஸ்கோபி சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடி குண்டு ஏதுமில்லை என்று தெரிய வந்தது. வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்டது வெறும் வதந்திதான் என்று கூறப்பட்டதை அடுத்து தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட பரபரப்பும், பீதியும் தணிந்தது.












Click it and Unblock the Notifications