ஆழ்துளை கிணறு பாதுகாப்பு: ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில்
சென்னை: ஆழ்துளை கிணறுகளை திறந்து வைத்திருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொதுநல வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
திறந்திருக்கும் ஆழ்துளை கிணறுக்குள் குழந்தைகள் விழுவது வாடிக்கையாகிவிட்ட நிலையில் தமிழக ஹைகோர்ட்டில் இதுகுறித்து பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், "ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது, மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆழ்துளை கிணறுகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் ஆழ்துளை கிணறு அமைக்க விண்ணப்பிப்பது, ஆழ்துளை கிணற்றின் அளவு உள்ளிட்ட அம்சங்களை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பாதுகாப்பு அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தாலும், ஆங்காங்கே விபத்துகள் தொடர்ந்த வண்ணமே இருப்பதாக கவலை தெரிவித்தனர். மேலும் விபத்துக்களுக்கு காரணமான அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விளக்கி மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.