விரட்டிய 2வது மனைவி: 25 ஆண்டுகளுக்கு பின் முதல் மனைவி குடும்பத்தோடு இணைந்த கண்டக்டர்
ஈரோடு: விபத்தில் கால்களை இழந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் அநாதையாக சிகிச்சை பெற்று வந்த கண்டக்டர் ஒருவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது குடும்பத்தோடு இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் பிறந்த 3-வது மாதத்தில் சென்னையில் இருந்த தங்கைக்கு பாலசுப்ரமணியத்தின் தந்தை தத்து கொடுத்து விட்டார்.
சென்னையில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய அவர் கோபியை சேர்ந்த முறைப்பெண்ணான சாரதா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர்.
பாலசுப்பிரமணியத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே மனைவி-மகள்களை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு விரட்டினார். அவர்கள் ஈரோடு வந்துவிட்டனர். ஒரு மகளுக்கு சமீபத்தில்தான் சாரதா திருமணம் செய்து வைத்தார்.
சென்னையில் பழகிய பெண்ணை 2-வது திருமணம் செய்த, அவர் 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தார். பின்னர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற, அவர் கடந்த 2010-ம் ஆண்டு விபத்தில் சிக்கி 2 கால்களை இழந்தார். இந்த நிலையில் அவரை 2-வது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை விட்டு விரட்டினர்.
இதனையடுத்து ஈரோடு வந்த அவர் அரசு மருத்துவமனையில் செவ்வாய்கிழமை இரவு அவர் சிகிச்சை பெற சென்றுள்ளார்.
அவரை ஒரு ஆட்டோ டிரைவர் அழைத்து வந்தார். துணைக்கு ஒருவர் இருந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. பின்னர் ஆட்டோ டிரைவர் அவருக்கு துணையாக இருப்பதாக கூறியதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவர் தனது பெயர் பாலசுப்பிரமணியம் என்றும், தனக்கு யாரும் இல்லை என்றும் தான் அனாதை என்றும் கூறி இருந்தார். இந்த செய்தி நாளிதழில் வெளியானது. அதனைப் பார்த்த அவருடைய முதல்மனைவி சாரதா, மகள்கள் தமிழ்ச்செல்வி மற்றும் தேவி ஆகியோர் உறவினர்களுடன் புதன்கிழமையன்று மருத்துவமனைக்கு வந்தனர்.
அப்போது தான் பாலசுப்பிரமணியன் அனாதை இல்லை என்றும் அவர் தனது குடும்பத்தை விட்டு 25 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததும் பின்னர் விபத்தில் கால்களை இழந்ததால் அவரை 2-வது மனைவி விரட்டி இருப்பதும் தெரியவந்தது.
25 ஆண்டுகளுக்கு முன் மனைவி பிள்ளைகளை பார்த்து பாலசுப்பிரமணியம் ஆனந்த கண்ணீர் விட்டார். நான் உங்களுக்கு செய்த துரோகத்துக்கு தண்டனை அனுபவிக்கிறேன். இனி உங்களிடம் வந்திருந்து உங்களை மேலும் சிரமப்படுத்தமாட்டேன் என்று அவர் தேம்பி அழுதார். அவரை மகள்களும் உறவினர்களும் தேற்றினார்கள். 25 ஆண்டுகளுக்கு முன் மனைவி-மகள்களை பிரிந்த பாலசுப்பிரமணியம் குடும்பம் தினத்தந்தி செய்தியால் இணைந்த காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது.