மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து: தேர்வு எழுதச் சென்ற 10ம் வகுப்பு மாணவிகள் காயம்
வேலூர்: வேலூரில் அரசு பேருந்து சாலையோரத்தில் உள்ள மரத்தன் மீது மோதியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ளது காவலூர் கிராமம். காவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பொருட்கள் வாங்க, மாணவ, மாணவிகள் படிக்க ஆலங்காயம் என நகருக்கு செல்கிறார்கள். காவலூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று இன்று காலை ஆலங்காயத்திற்கு கிளம்பியது.
மலைப் பாதையில் செல்கையில் பேருந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவிகள், பொது மக்கள் என மொத்தம் 20 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
காயம் அடைந்த மாணவிகளில் 10 பேர் பத்தாம் வகுப்பு மாணவிகள். அவர்கள் பொதுத்தேர்வு எழுத சென்ற வழியில் விபத்தில் சிக்கினர். இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி அதிமுக எம்.எல்.ஏ. சம்பத்குமார் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தேர்வு எழுத செல்கையில் இப்படி விபத்தில் சிக்கிவிட்டோம். நாங்கள் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டதே என்று மாணவிகள் சம்பத்குமாரிடம் கூறி அழுதனர். கவலைப்படாதீர்கள், நீங்கள் தேர்வு எழுத மாற்று ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அவர்களைத் தேற்றினார்.