தமிழர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் தணிந்தது.. கர்நாடக எல்லையில் போக்குவரத்து தொடக்கம்
இதையடுத்து தற்போது கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கு பஸ் போக்குவரத்துத் தொடங்கியுள்ளது.
கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, ராஜா ஆகியோருடன் பழனி கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருமாநில எல்லைப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கர்நாடக மாநில வனத்துறையினர் பால்ரஸ் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவரும் காயமடைந்தனர்.
அவர்களில் முத்துசாமி, ராஜா ஆகியோர் தப்பி வந்துவிட்ட போதிலும், பழனியை மட்டும் காணவில்லை. அவரை தேடிவந்த அப்பகுதி மக்கள், கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் காவிரி ஆற்றில் உருக்குலைந்த நிலையில் பழனியின் உடலை கண்டெடுத்துள்ளனர்.
பழனியின் இடது கை வெட்டப்பட்டும், பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டும் இருந்ததுடன், தலையில் வெட்டுக்காயங்களும், மார்பில் குண்டு பாய்ந்த காயங்களும் காணப்பட்டன. கர்நாடக வனத்துறையினர் பழனியை பிடித்து சித்திரவதை செய்து, கடைசியில் சுட்டுக்கொன்றுவிட்டனர் என்று தெரியவந்திருக்கிறது.
இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் எல்லைப் பகுதி தமிழக மக்களை கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது. உடனடியாக எல்லையில் திரண்டு போராட்டம் நடத்தப்பட்டது. கர்நாடக சோதனைச் சாவடி தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு பக்கத்திலிருந்தும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் பதட்டம் நீடித்து வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குப்பிறகு பதட்டம் தணிந்தது. மேட்டூரில் இருந்து கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பஸ்களும் போக ஆரம்பித்துள்ளன.