ஆன்லைன் மூலம் வேர்கடலையை வாங்கி ஆட்டையை போட்ட சென்னை தொழிலதிபர் கைது
சென்னை: ஆன்-லைன் வர்த்தகம் மூலம் 450 மூட்டை வேர்கடலையை வாங்கி மோசடி செய்த தொழிலதிபரை சென்னை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான தொழிலதிபரின் பெயர் முகமது ரசீத், 34. என்பதாகும். மண்ணடியில் வசித்து வரும் இவர், ஆன்-லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தார். இவர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து கடுகு, மிளகாய், அரிசி போன்ற பொருட்களை ஆன்-லைன் மூலம் மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் மீது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோட்டேஷ் ஜெயின் என்பவர் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் தலா 50 கிலோ எடை கொண்ட 450 மூட்டை வேர்கடலையை வாங்கி மோசடி செய்துவிட்டதாகவும், அதற்கு உரிய பணத்தை தராமல் ஏமாற்றி விட்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில், இந்த புகார் மீது தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன், தேனாம்பேட்டை உதவி கமிஷனர் சுப்பிரமணி ஆகியோர் மேற்பார்வையில் தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். தீவிர விசாரணைக்கு பிறகு முகமது ரசீத் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் இதுபோல ஆன்-லைன் வர்த்தகத்தில் ரூ.75 லட்சம் வரை பலரிடம் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.