இன்னும் மூன்றே நாட்கள்தான்... சூறாவளியாய் மாறிய தலைவர்கள்.. சுழன்றடிக்கும் பிரச்சாரம்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 3 நாட்கள்தான் உள்ளன. 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில் 14ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது என்பதால் முக்கியக் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.
தமிழகம் முழுக்க சுற்றிச் சுற்றி வந்து பேசிய முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் தங்களது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தற்போது வேகப்படுத்தியுள்ளனர்.
பெரும்பாலான தலைவர்கள் தாம் போட்டியிடும் தொகுதிகளில் முகாம் போட்டுள்ளனர். சிலர் மட்டுமே பிற ஊர்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதா
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் செய்து பேசி வந்த முதல்வர் ஜெயலலிதா தான் போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகரில் இதுவரை 3 நாட்கள் பிரச்சாரம் செய்துள்ளார்.
சென்னையில் 3 நாட்கள்
நேற்று தனது 3வது முறை பிரச்சாரத்தை ஜெயலலிதா மேற்கொண்டார். வேனில் அமர்ந்தபடி 10 க்கும் மேற்பட்ட இடங்களில் பேசி வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா.
திருவாரூரில் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி தான் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் தற்போது முகாமிட்டுள்ளார். அவருக்காக ஏற்கனவே அங்கு அவரது இளைய மகன் மு.க.தமிழரசு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மகள் செல்வியும் வீடு வீடாகப் போய் வாக்கு கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கருணாநிதியும் தொகுதிக்கு வந்து விட்டார்.
2 நாள் பிரச்சாரம்
2 நாள் அங்கு பிரச்சாரம் செய்யும் கருணாநிதி தனக்காக வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடவுள்ளார். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிடும் உளுந்தூர்ப்பேட்டையில் முகாமிட்டுள்ளார். ஏற்கனவே அங்கு பிரச்சாரம் செய்துள்ள விஜயகாந்த், இன்று முதல் தனது தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போகிறார்.
அன்புமணி
பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் செய்து முடித்த நிலையில் தான் போட்டியிடும் பென்னாகரத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் கடந்த 10ம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 14ம் தேதி வரை இது தொடர்கிறது. ஏற்கனவே அவரது மனைவி செளம்யா தனது கணவருக்காக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது நினைவிருக்கலாம்.
சீமான்
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், பல்வேறு தொகுதிகளுக்கும் விஜயம் செய்து முடித்து விட்ட நிலையில் தற்போது தான் போட்டியிடும் கடலூரில் முகாமிட்டுள்ளார். அங்கு அவருக்காக ஒரு தனி டீமே தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.