மெட்ரோ ரயிலை கொண்டு வந்தது திமுகதான்: என் மீது வழக்கு தொடுக்க தயாரா?... கேட்கிறார் ஸ்டாலின்
சென்னை: தி.மு.க.தான் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது. இதில் நான் பேசுவது தவறு என்றால் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுக்க தயாரா? என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.
இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலினிடம், மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் ஆலந்தூரில் நேற்று நடந்துள்ளது. அதில் அமைச்சர்கள் பங்கேற்று பேசி இருக்கிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்டத்தை தி.மு.க.தான் கொண்டு வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்காக அப்போது ஜப்பான் நாட்டுக்கு சென்று நிதி உதவி பெற்று வந்தேன். இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கியும் வைத்தேன்.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் மெட்ரோ ரயிலை விட மோனோ ரயில் தான் சென்னைக்கு உகந்தது என்று பேசினார். அவரது பேச்சை சட்டசபை அவைக் குறிப்பில் இருந்து எடுத்து வந்து ஆலந்தூரில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் விரிவாக பேசினேன்.
வழக்கு தொடுப்பாரா?
நான் சொன்ன கருத்து அனைத்தும் ஜெயலலிதா சட்டசபையில் ஆதாரப் பூர்வமாக பேசிய பேச்சு தான். தி.மு.க.தான் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது. இதில் நான் பேசுவது தவறு என்றால் கோர்ட்டில் வழக்கு தொடுக்க தயாரா?
மெட்ரோ ரயிலை யார் கொண்டு வந்தது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் சட்டசபையில் மெட்ரோ ரயில் பற்றி ஜெயலலிதா பேசிய பேச்சை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வெளியிடுவேன்.
கடலூரில் 18ம் தேதி தி.மு.க. சார்பில் நீதி கேட்கும் பேரணி பொதுக் கூட்டம் பிரம்மாண்டமாக நடக்கிறது. இதில் அ.தி.மு.க. அரசு மீது புதிய குற்றச்சாட்டுகளை வெளியிடுவேன் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.