நடராஜன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு.. பிப்.10க்கு ஒத்தி வைப்பு
இன்று வழக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வரிஏய்ப்பு வழக்கை பிப்ரவரி 10க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
சென்னை: நடராஜன் மீதான வரிஏய்ப்பு வழக்கை பிப்ரவரி 10க்கு ஒத்திவைத்துள்ளது, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம்.
1994ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி லண்டனில் இருந்து புத்தம் புதிய லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்தார் நடராஜன். நடராஜன் தனது தமிழரசி பப்ளிகேஷன் நிறுவனம் சார்பில் இதை வாங்கினார். 3,000 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இந்தக் கார் பல கோடி மதிப்புடையது. இந்தக் காரின் ஆவணங்களி்ல் அது 1993ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் என்றும் குறிப்பிடப்பட்டு குறைவான வரி கட்டப்பட்டது.
சந்தேகமடைந்த சுங்கத் துறையினர் விசாரணை நடத்தியதில் அந்தக் கார் 1994ல் தயாரிக்கப்பட்ட, புத்தம் புதிய கார் என்பதும், வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து பழைய கார் போல காட்டியதும் தெரிய வந்தது.
இதன் மூலம் அரசுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 412 இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து நடராஜன், தமிழரசி பப்ளி கேஷன் நிர்வாகியான ஜே.ஜே.டிவி நிர்வாகியாக இருந்த சசிகலாவின் உறவினர் வி.என். பாஸ்கரன், காரை அனுப்பிய லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், அயல்நாட்டு வர்த்தக சான்றிதழ் வழங்கிய சென்னை அபிராமிபுரம் இந்தியன் வங்கி மேலாளர் சுஜரிதா சுந்தர்ராஜன், உதவி மேலாளர் பவானி ஆகியோர் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
நீதிபதி தனது தீர்ப்பில், எம்.நடராஜன் உட்பட 4 பேருக்கு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 2 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் 4 பேரின் தண்டனைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருந்தது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கடந்த 2012ஆம் ஆண்டு பாஸ்கரன், நடராஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் இருந்து நடராஜன், பாஸ்கரனை விடுவிக்க பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் மறுத்து விட்டது. பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணை தொடங்கும் என அறிவித்தது.
இன்று வழக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வரிஏய்ப்பு வழக்கை பிப்ரவரி 10க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.