தேர்தல் பிரசாரத்திற்கு மின்சாரம் திருட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்கு
சென்னை: வடசென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து பயன்படுத்தியதாக பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வடசென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வாசுகிக்கு ஆதரவாக அக்கட்சியினர் வடசென்னை பகுதியில் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை கொடுங்கையூர் எழில் நகர் தொப்பை விநாயகர் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வேட்பாளர் வாசுகிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீரென்று வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது தேர்தல் பிரசாரத்திற்காக அங்குள்ள மின்பெட்டியிலிருந்து மின்சாரம் திருடப்பட்டு தேர்தல் பிரசார கூட்டத்துக்கு பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக இதுகுறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த கொடுங்கையூர் போலீசார் தேர்தல் பிரசாரத்திற்கு மின்சாரம் திருடியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மின்சாரம் திருடியதாக அரசியல் கட்சி மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications