காவிரி பற்றி அலட்சியமாக பதிலளித்த நிர்மலா சீதாராமன்.. கருப்பு கொடி காட்டி செருப்பு வீசிய திமுகவினர்!
காவிரி பிரச்சனை குறித்த கேள்விக்கு அலட்சியமாக பதில் சொன்ன பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுகவினர் கருப்பு கொடி காட்டியுள்ளனர்.
Recommended Video
ராமநாதபுரம்: காவிரி பிரச்சனை குறித்த கேள்விக்கு அலட்சியமாக பதில் சொன்ன பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக திமுகவினர் கருப்பு கொடி காட்டியுள்ளனர். ராமநாதபுரம் வந்த அவரின் கார் மீது கல், செருப்பு வீசியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம், ஆனால் காவிரிக்கு திட்டம் ஒன்றை உருவாக்குவோம் என்றும் கூறியது. இதனால் சில நாட்கள் முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் வந்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக கருப்பு கொடி காட்டியுள்ளது. பரமக்குடிக்கு அருகில் பார்த்திபனூரில் நிர்மலா சீதாராமன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நிர்மலா சீதாராமன் வருகையையொட்டி ராமநாதபுரம் பார்த்திபனூரில் ஏராளமான அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திமுகவினருக்கும் பாதுகாப்பு படைக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காவிரி விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு அலட்சியமாக பதில் சொன்னதால் திமுகவினர் ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கருப்பு கொடி காட்டப்பட்டுள்ளது. அதோடு சில தொண்டர்கள் நிர்மலா சீதாராமன் கார் மீது செருப்பு, கற்கள் வீசி இருக்கிறார்கள். இதனால் அங்கே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.