காவிரி உரிமை மீட்பு பயணம்: கடலூரில் இருந்து கவர்னர் மாளிகை வரை பேரணி - ஸ்டாலின்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கவர்னர் மாளிகை நோக்கி இன்று அமைதி பேரணி நடத்த உள்ளதாக காவிரி உரிமை மீட்பு போராட்டம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கடந்த 13ஆம் தேதி கடலூரில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்னை சென்று ராஜ் பவனில் ஆளுநரை நேரில் சந்தித்து பேச உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் அவசியம் பற்றி ஆளுநரிடம் வலியுறுத்த உள்ளனர்.
திருச்சி முக்கொம்புவில், கடந்த சனிக்கிழமை அன்று காவிரி உரிமை மீட்பு பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு, விவசாயிகள், பொதுமக்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
5ஆம் நாளான இன்று, வேளாங்கண்ணியில் இருந்து, காவிரி உரிமை மீட்பு பயணத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். இன்றைய நாளின் முதற்பகுதியாக, வேளாங்கண்ணியில் இருந்து, பரவை, பாப்பாகோவில், நாகப்பட்டினம் வழியாக செம்பனார்கோவில் சென்றடைந்தார்.
அங்கு, விவசாயிகள், அரசியல் கட்சியினரை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அனைத்து கட்சி கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுத்தபடி, தமிழ்நாட்டுக்கு பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சர்கள் வரும்போது கறுப்பு கொடி போராட்டம் நடத்துவது என அறிவித்திருக்கிறோம்.
நாளை சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிரதமர் வருகிறார். சென்னை, அடையாறு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அவருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதை தடுத்து நிறுத்த, இன்று மாலை முதல் எல்லோரையும் கைது செய்யவிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. இந்தப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் எங்களையும் கூட ஒருவேளை கைது செய்யலாம். ஆங்காங்கே இருக்கின்ற திமுக மற்றும் தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்கள் எல்லாம் கைது செய்யப்படும் நிலை ஏற்படலாம். எத்தனை பேரை கைது செய்து விடுவீர்கள்? எவ்வளவு பேரை சிறையில் அடைத்து விடுவீர்கள்?
எத்தனை பேரை நீங்கள் சிறையில் அடைத்தாலும், பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டுவதற்கு பொதுமக்கள் தயாராக இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும் நாளை துக்க நாளாக கடைபிடிக்கும் வகையில், 12 ஆம் தேதியன்று எல்லோருடைய வீடுகளிலும் கறுப்பு கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கறுப்பு உடையணிய வேண்டும் என்றும், கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் இரு நாட்களுக்கு முன்பாக நாங்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம்.
எனவே, பிரதமர் வரும் நாள், தமிழ்நாட்டுக்கு துக்க நாள் என்று இந்தியாவுக்கே தெரிவிக்கும் வகையில், நாளை காலை முதல் மாலை வரை எல்லோர் வீட்டிலும் கறுப்பு கொடியேற்ற எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.
இதற்கிடையே, அரியலூரில் தொடங்கிய காவிரி உரிமை மீட்புக் குழுவின் 2வது அணியினரின், மூன்றாம் நாள் பயணம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இரு பயணக்குழுவும் 12ஆம் தேதி கடலூரில் இணைகிறது. அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
13ஆம் தேதி அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு சென்னை சென்று ராஜ் பவனில் ஆளுநரை நேரில் சந்தித்து
காவிரி நீர் பிரச்சினை குறித்தும் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கான காரணம் குறித்து விளக்க உள்ளனர்.