For Daily Alerts
Just In
மேலாண்மை வாரியம் இல்லை.. நூற்றாண்டுகளாக 'காவிரியில்' துரோகங்களை சுமக்கும் தமிழகம்
காவிரி பிரச்சனை குறித்த வரலாற்று பின்னணி இது.
Recommended Video
காவிரி மேலாண்மை வாரியம் கெடு இன்றுடன் முடிவடைகிறது
சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. காவிரி நதிநீர் பிரச்சனையில் நூற்றாண்டுகளாக துரோகங்களைத்தான் தமிழகம் தாங்கி வருகிறது.
- கி.பி.1807ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமார் 85 ஆண்டுகாலம் நீடித்தது.
- கி.பி.1892-ம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான முதலாவது ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே உருவானது. இந்த ஒப்பந்தப்படி காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசு ஒரு அணையைப் புதிதாகக் கட்ட சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது.
- 1910-ம் ஆண்டு மைசூர் அரசு கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கி அணையைக் (கிருஷ்ணராஜசாகர்) கட்ட கர்நாடகா திட்டமிட்டது. ஆனால் சென்னை மாகாண அரசு அத்திட்டத்தை நிராகரித்தது. அப்போதைய மத்திய அரசிடம் மைசூர் அரசு முறையிடு செய்ய கண்ணம்பாடியில் 11 டி.எம்.சிக்கு மேல் நீரைத் தேக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதியும் பெற்றது.
- ஆனால் கர்நாடகா தமது தில்லுமுல்லு வேலையாக 41.5 டி.எம்.சி.நீரைத் தேக்கும் அளவுக்கு அணையைக் கட்ட சென்னை மாகாணம் கொந்தளித்தது. இதனால் அப்போதைய மத்திய அரசு கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்தது. ஆனால் அவரால் திட்டவட்டமான தீர்ப்பைத் தர இயலவில்லை.
- இதனால் சென்னை மாகாண அரசு மேல்முறையீடு செய்தது. சென்னை மாகாண அரசு மற்றும் மைசூர் அரசுகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தைகளின் விளைவுதான் இன்று பேசப்படுகிற 1924-ம் ஆண்டு ஒப்பந்தம்.
- தன்னிச்சையாக அணைகளை கட்டிய கர்நாடகம்... 1924-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே 2-வது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 50 ஆண்டுகாலம்தான் என முடிவு செய்யப்பட்டது.
- இந்த ஒப்பந்தப்படி மைசூர் அரசு விரும்பியபடியே 41.5 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையையும் சென்னை மாகாண அரசு மேட்டூர் அணையையும் கட்டிக் கொள்ள வழியேற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் முடிவடையவதற்கு முன்பாகவே 1960கள், 1970களில் காவிரி ஆற்றின் குறுக்கே தன்னிச்சையாகவே அணைகளைக் கட்டிக் கொண்டது.
- 1972-ம் ஆண்டு உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்றை அமைத்தது. அதன் மீது தமிழகம், கர்நாடகா அரசுகள் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஒப்பந்தம் உருவானது. 1974-ல் 1924ம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியானது.
- 1976-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகம், கர்நாடகா இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் இல்லை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவே இல்லை என்றும் கூறப்படுவது உண்டு.
- 1986-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். காவிரி நதிநீர் விவகாரத்துக்கு தீர்வு காண நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார்.
- 1990ம் ஆண்டு வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது தமிழத்துக்கு சாதகமாக காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
- 25.6.1991-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை வழங்கப்பட்டது. இந்த இடைக்கால ஆணைப்படி மேட்டூர் அணைக்கு 205 டி.எம்.சி. நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கர்நாடகா தமது பாசனப்பரப்பை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா ஏற்கவில்லை. இடைக்கால ஆணைக்கு எதிராக அவசர சட்டத்தை கர்நாடகா பிறப்பிப்பது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
- 10.12.1991-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது. ஆனால் கர்நாடகா இதை ஏற்கவில்லை.
- 1997 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முடிவுகளையும் கர்நாடகா நிராகரித்தே வந்தது.
- 5.2.2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது. காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என்றும் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி. நீரும் ஒதுக்கீடு செய்து இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. கேரளாவுக்கு 30 டி.எம்.சி. நீரும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்கவும் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
- 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்தது. நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவற்றில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நீரின் அளவை உச்சநீதிமன்றம் குறைத்தது. கர்நாடகாவுக்கு கூடுதல் நீரை வழங்கியது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க சொன்னது. ஆனால் உச்சநீதிமன்றமோ 177.25 டிஎம்சி நீர் என குறைத்தது. காவிரி நடுவர் மன்றம் கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி அளித்தது. உச்சநீதிமன்றமோ 284.75 டிஎம்சி கொடுத்தது. அத்துடன் 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. இந்த கெடு இன்றுடன் முடிவடைந்தது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
Comments
English summary
Here is the timline of Cauvery Water Dispute.