விஷ்ணுப் பிரியா தற்கொலைக்கு காதல் தோல்விதான் காரணமாம்.. சிபிசிஐடி போலீஸ் திடீர் தகவல்
நாமக்கல்: காதல் தோல்வி மற்றும் பணியின் போது சரியாக செயல்பட முடியாத மனநிலை ஆகியவை காரணமாக டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிபிசிஐடி தரப்பிலிருந்து திடீரென புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது தற்கொலைக்கு உயர் அதிகாரிகள் கொடுத்த டார்ச்சர்தான் காரணம் என பொதுவாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் சிபிசிஐடி விசாரணையில், காதல் தோல்வி மற்றும் பணியின் போது சரியாக செயல்பட முடியாத மனநிலை ஆகியவை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சிபிசிஐடி தரப்பில் சிலர் கூறுகையில், விஷ்ணுப்பிரியா ஒரு வாலிபரை காதலித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் இரவு 10 மணிக்கு மேல் அவரிடம் போனில் பேசி உள்ளார். சில நேரம் ஒரு மணி நேரம் கூட அவர்கள் போனில் பேசி உள்ளனர். 2 நாள் விடுப்பில் ஊருக்கு சென்ற விஷ்ணுபிரியாவுக்கு மாப்பிள்ளை பார்க்க இருப்பதாக அவரது தந்தை ரவி, தாயார் கலைச்செல்வி ஆகியோர் கூறினர்.
தான் ஒரு வாலிபரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறியதை பெற்றோர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மன வேதனையில் இருந்த அவருக்கு போலீஸ் பணியிலும் அடுத்தடுத்து மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்து இருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்து உள்ளதாம்.
அந்தக் காதலரை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தங்களது வசம் கொண்டு வந்துள்ளனராம். அவரிடம் விசாரணை நடந்து வருகிறதாம்.
இதற்கிடையே, நேற்று கடலூர் சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் விஷ்ணுபிரியாவின் தாயார் கலைச்செல்வியிடம் காதல் விவகாரம் குறித்து விசாரணை நடத்திய போது அவர் பதிலளிக்காமல் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறுகிறார்கள். தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்குள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிக்கை தாக்கலுக்குப் பின்னர், காதல் தோல்வியால் தற்கொலை என்பதை மறைத்து நாமக்கல் எஸ்.பி மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கொடுத்த தொல்லையால் அவர் தற்கொலை செய்ததாக வதந்தி பரப்பி போலீஸ் மீது களங்கத்தை ஏற்படுத்தியதாக கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை பாயும் என்றும் போலீஸ் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.