வாலிபரை எஸ்.ஐ. சுட்டுக் கொன்ற வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவு
மதுரை:
ராமநாதபுரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டு எஸ்.ஐ.யால் சுட்டுக்கொல்லப்பட்ட சையதுவின் உடலை அரசு மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் அழைத்துச் செல்லப்பட்ட சையது என்ற வாலிபர் எஸ்.ஐ. காளிதாஸால் சுட்டுக் கொல்லப்பட்டார். சையது தன்னை கத்தியால் குத்த வந்ததால் தான் அவரை சுட்டேன் என காளிதாஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பலியான சையதுவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். சையதின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகுபர் அலி என்பவர் இந்த சம்பவம் குறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் சையதின் உடலை அரசு மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்துறை செயலாளர்
சையது கொலை தொடர்பாக இன்று தமிழக உள்துறை செயலாளர் அபூர்வ வர்மாவை நேரில் சந்தித்த எஸ்.எம்.பாக்கர் தலைமையிலான தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள் அவரின் கொலைக்கு காரணமான துணை ஆய்வாளர் காளிதாஸ் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் கொலை வழக்கை பதிவு செய்யவும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.பாக்கர் கூறுகையில்,
சையது துணை ஆய்வாளரால் கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நேற்று காவல்துறை கூடுதல் தலைவர் ராஜேந்திரனை சந்தித்து கொலைக்கு காரணமான துணை ஆய்வாளர் காளிதாஸ் மீது 302 வது பிரிவின் கீழ் கொலை வழக்கை பதிவு செய்ய வேண்டும் என முறையிட்டிருந்தோம். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்திருந்தார்.
ஆனால் இதுவரை உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காளிதாஸ் இந்த நிமிடம் வரை கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும் என்றெல்லாம் சிலர் கோரிக்கை வைக்கிறார்கள். சி.பி.சி.ஐடியும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தவிர இதற்கு எந்த விசாரணையும் தேவை இல்லை என்கிற வகையில் இது அப்பட்டமான கொலை என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
அதனால் துணை ஆய்வாளர் காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை சிறைபடுத்துவதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்க முடியும். காளிதாஸ் மீது கொலை வழக்கை பதிவு செய்யாதவரை சையதுவின் பிரேதத்தை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் உறுதி காட்டி வருகின்றனர்.
இதே கோரிக்கையை முன் வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கும் தொடுத்துள்ளனர். ஏற்கனவே சென்னை நீலாங்கரை சிறுவன் தமீம் அன்சாரி போலீசாரால் துப்பாக்கி சூட்டுக்கு ஆளான போது அந்த பிரச்சனையை முன்னெடுத்து போராடிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சையது வழக்கிலும் நீதி கிடைக்கும் வரை போராடும்.
இந்த சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதால் மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கவுள்ளோம் என்றார்.