ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாறும் அபாயம்.. தவிர்க்கப் போராடும் சிபிசிஐடி!
சென்னை: தமிழ்நாட்டையே உலுக்கிய திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையானது சிபிஐக்கு மாற்றப்பட்டடு விடாமல் தவிர்ப்பதற்காக சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறதாம். இதனால் விசாரணையை தற்போது வேகமாக முடுக்கி விட்டுள்ளனராம்.
திருச்சியில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி அதிகாலை வீட்டில் இருந்து வாக்கிங் சென்றபோது கடத்தி கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர். இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகும் வழக்கில் சிறு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
கொலை நடந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் சிபிசிஐடி விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடவேண்டும் என கடந்த 11 ஆம் தேதி ராமஜெயம் மனைவி லதா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
இதையடுத்து வழக்கின் தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, விசாரணையை வரும் ஜனவரி 9 ஆம் தேதிக்கு மாற்றி நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் சிபிசிஐடி தரப்பு கலக்கமடைந்துள்ளது. அன்றைக்குள் உருப்படியான நிலவர அறிக்கையைக் கொடுக்காவிட்டால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என்பதால், அதைத் தவிர்க்க சிபிசிஐடி தரப்பு மும்முரமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சந்தேக நபர்கள் மற்றும் வழக்கு விசாரணையின் ஆதாரங்களை தூசி தட்டியுள்ள சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகளை சந்தித்து தகவல்களை திரட்டி வருகின்றனராம்.