வெளிநாட்டில் இருந்து ரூ1.55 கோடி அனுமதியின்றி வசூல்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி
முறையாக அனுமதியில்லாமல் ரூ1.55 கோடி வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: வெளிநாட்டில் இருந்து முறையாக அனுமதி பெறாமல் ரூ1.55 கோடி வசூலித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை சிபிஐ நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
1997-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் இருந்து ரூ1.55 கோடியை அனுமதியில்லாமல் ஜவாஹிருல்லா பெற்றார் என்பது சிபிஐ தொடர்ந்த வழக்கு. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மோகன்தாஸ், கடந்த 2011-ம் ஆண்டு ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த சிறை தண்டனையை எதிர்த்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா மேல்முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து இன்று தீர்ப்பளித்தது.