கருணாநிதியுடன் தயாநிதி சந்திப்பு! ஆர்எஸ்எஸ் தலைவர்களை மகிழ்விக்கிறது சிபிஐ என்று குற்றச்சாட்டு!!
சென்னை: சன்டிவி ஊழியர்களை கைது செய்துள்ள விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களை மகிழ்விக்க சிபிஐ பயன்படுத்தப்பட்டுள்ளதாக தயாநிதி மாறன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த காலத்தில், பிஎஸ்என்எல் இணைப்புகளை, சன்டிவிக்கு இலவசமாக பயன்படுத்தி ஒளிபரப்பு செய்து பணம் சம்பாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ விசாரித்து வந்தது. கடந்த ஆட்சி காலத்தின்போது இந்த வழக்கில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த வி.கவுதமன், சன் டி.வியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், சன் டி.வியின் எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி ஆகியோரை சிபிஐ நேற்றிரவு கைது செய்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை, தயாநிதி மாறனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மாறன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், தயாநிதி மாறன் கடும் கோபமடைந்துள்ளார். இன்று காலையிலேயே திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, வழக்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்களிடம் தயாநிதி கூறியதாவது: தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவரிடமும், ஏற்கனவே பலமுறை சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. இருப்பினும் இப்போது கைது செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை திருப்திப்படுத்தவே, இந்த கைது நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் கொள்கைவாதி ஒருவரை மகிழ்விக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் மூன்றாம்தரமான விசாரணையை சிபிஐ நடத்தியுள்ளது. இதன்மூலம், எனக்கு எதிராக வற்புறுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளது சிபிஐ.
இந்த வழக்கில், என்னை குற்றவாளியாக்குவதற்கு, சிபிஐயிடம் போதிய ஆதாரங்கள் கிடையாது. எனவே தங்களது பொறுப்பை சிபிஐ இப்படி திசைமாற்றியுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் சாமானிய மனிதனால் எப்படி நீதியை பெற முடியும்?
விசாரணை அமைப்பாக இருக்க வேண்டிய சிபிஐ, நிர்ணயிக்கப்பட்ட அமைப்பாக மாறியுள்ளது. இதுகுறித்து சிபிஐ இயக்குநருக்கும், மனித உரிமை கமிஷனுக்கும் நான் கடிதம் எழுத உள்ளேன்.
சன்டிவியுடன் தொடர்பில்லை:
எனக்கும் சன் டிவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சன் டிவியில் தொலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்பட்டன என்று கூறினால்தான் என்னை சிக்க வைக்க முடியும் என்று இப்படி பொய்ப் புகார் கூறப்பட்டுள்ளது. 1 கோடி ரூபாய் அளவுக்கு தொலைபேசி பயன்படுத்தியதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இது ஒரு சிவில் குற்றம். இதற்காக நோட்டீஸ் அனுப்பினால், அந்த தொகையை அபராதத்துடன் சேர்த்துக் கட்டத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு தயாநிதி தெரிவித்தார்.