சிறுத்தைக்கு சீதா, ரத்த நாளங்களுக்கு நலங்கள்.. வினாத்தாளை கூட உருப்படியாக தயாரிக்க முடியாத சிபிஎஸ்இ
Recommended Video

மதுரை: தமிழில் நீட் தேர்வை எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஎஸ்இ மிக மோசமாக மொழிபெயர்ப்புடன் கூடிய வினாக்களை வழங்கியுள்ளதே இதற்கு காரணம்.
மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் கடந்த 6ம் தேதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு இந்த தீர்ப்பை இன்று பிறப்பித்தது. மொத்தம் 49 வினாக்களில் மொழியாக்கம் தவறாக இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் சிபிஎஸ்இ அமைப்பு தேசிய அளவிலான ஒரு தேர்வை நடத்த இயலாத அமைப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல லட்சம் பேருக்கு கல்வி பயின்று தரும் ஒரு அமைப்பான சிபிஎஸ்இ, முட்டாள்தனமாக நடந்து கொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
ரங்கராஜன் இதுபற்றி கூறுகையில், தமிழும், தெரியாத, ஆங்கிலமும் தெரியாதவர்களை வைத்து தமிழில் நீட் தேர்வு எழுதியோருக்கு வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். அவுட்சோர்சிங் முறையில் பொறுப்பற்றத்தனமாக வினாத்தாள்கள் தயாரிக்கப்படுவதே இதற்கெல்லாம் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே, சிபிஎஸ்இக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வியை எழுப்பியிருந்தனர். ரத்த நாளங்கள் என்ற வார்த்தைக்கு பதிலாக ரத்த நலங்கள் என்றும், வவ்வாலுக்கு பதில் வாவால் என்றும் வினாத்தாளில் குறிப்பிடப்பட்டிருந்ததை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கு தொடராத நிலையில், இந்த வழக்கை பெரிதாக எடுக்க வேண்டாம் என்றார்.
இவ்வாறு அவர் கூறியதை கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், சிபிஎஸ்இ என்ன சர்வாதிகார அமைப்பா என கேள்வி எழுப்பியிருந்தனர். நீங்கள் தவறு செய்தாலும், அதை எதிர்த்து யாரும் வழக்கு தொடர கூடாது என்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில்தான், தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்களை வழங்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மனுதாரர் வழக்கறிஞர் ஷாஜி செல்லன் அளித்த பேட்டியில், பீகாரில் நீட் தேர்வு எழுத பதிவு செய்தவர்கள் 35,000 சொச்சம். ஆனால், தேர்ச்சி பெற்றவர்கள் 37,000க்கும் மேற்பட்டோர் என தெரியவருகிறது.
சீதா என்றால் சீதாப்பழம் அல்லது, ராமரின் மனைவி சீதா என்றுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், சிறுத்தையை தமிழில் சீதா என குறிப்பிட்டு வினா எழுப்பியுள்ளனர். இப்படி ஒரு வார்த்தை தமிழில் எங்காவது உள்ளதா? இதேபோலத்தான் 49 வினாக்களுக்கான மொழி பெயர்ப்பு தப்பாக உள்ளது. எனவே இந்த கேள்விகளுக்கு விடை எழுதியோர், எழுதாதோர் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல், அனைவருக்குமே 196 கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் ஹைகோர்ட் தீர்ப்பு என்றார்.












Click it and Unblock the Notifications