அப்துல் கலாம் மணி மண்டபத்தில் செல்போன், கேமராவிற்கு தடை! கடும் கெடுபிடியால் மக்கள் அதிருப்தி!
அப்துல் கலாம் நினைவிடத்தில் செல்போன் மற்றும் கேமராவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்: அப்துல் கலாம் நினைவிடத்திற்கு செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மணி மண்டபம் கடந்த 27ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அப்துல்கலாமின் மணி மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
அறிவியல் விஞ்ஞானியான அப்துல்கலாமின் நினைவிடத்தில் கையில் வீணையுடன் அவர் இருப்பது போன்ற சிலை நிறுவப்பட்டது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நினைவிடத்தில் கெடுபிடி
மேலும் அவரது சிலையின் அருகே இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை வைக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கலாமின் நினைவிடத்துக்கு செல்ல கடுமையான கெடுபிடிகளை அரசு விதித்துள்ளது.
செல்போன், கேமராக்களுக்குத் தடை
கலாமின் நினைவிடத்தை பார்வையிட செல்லும் மக்கள் செல்போன் மற்றும் கேமராக்கள் கொண்டு செல்லகூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த தடையை விதித்துள்ளது.
செய்தி சேகரிக்கவும் தடை
மேலும் அப்துல்கலாமின் நினைவிடத்தில் செய்தி சேகரிக்கவும் பத்திரிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் அனுமதி பெற்றே பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க வேண்டும் என்றும் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
எளிமையாக பழகிய கலாம்
கலாம் நினைவிடத்தில் விதிக்கப்படும் கடும் கெடுபிடிகளால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். அறிவியல் விஞ்ஞானி, குடியரசுத் தலைவர், கல்லூரி பேராசிரியர் என தனது வாழ்க்கையை கடந்த அப்துல் கலாம் அனைவரிடமும் எளிமையாக பழகினார்.
கெடுபிடிகளால் அதிர்ச்சி
யாராலும் எளிதில் அணுகக் கூடியவராக இருந்தார். ஆனால் அவரது நினைவிடத்தில் இப்போது கடும் கெடுபிடி விதிக்கப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.