மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - வேல்முருகன் கோரிக்கை
சென்னை: நரிக்குறவர் வகுப்பினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது போல், மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளிக் கவுண்டர் ஆகிய வகுப்பினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையை ஏற்று செயல்பட்ட மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நடவடிக்கை மூலம் நரிக்குறவர் உள்ளிட்ட சமூகத்தினர் கல்வியிலும் வாழ்க்கையிலும் மேம்படைய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அந்த இன மக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதேபோல் தமிழக மீனவர்களை பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தமிழகத்தின் நெடுநாளைய கோரிக்கை. இதையும் மத்திய அரசு பரிசீலித்து மீனவர்களையும் பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசும் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications