மதுரை, கோவை, திருச்சிக்கு வருமா டிராம்...?
சென்னை: முன்னொரு காலத்தில் சென்னையின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த டிராம் ரயில் சேவையை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால் இந்த முறை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இந்தத் திட்டத்தை மத்திய அரசே முழுமையாக செயல்படுத்தவுள்ளது.
அதேசமயம், மாநில அரசின் ஒத்துழைப்பும் இதில் கோரப்படவுள்ளதாம்.
சென்னை டிராம்
சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களின் முக்கிய அங்கமாக திகழ்ந்தது டிராம் சேவை. சென்னையில் இந்த டிராம் சேவை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது.
லண்டன் நிறுவனத்தின் அறிமுகம்
லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இந்த டிராம் சேவையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. சென்னையில் மெட்ராஸ் டிராம்வேஸ் என்ற பெயரில் டிராம் ரயில்கள் ஓடின.
முதலில் குதிரை டிராம்
ஆரம்பத்தில் சிறிய தண்டவாளத்தில் குதிரைகள் மூலம் இந்த டிராம் ரயில் இயக்கப்பட்டது. பின்னர் நவீனப்படுத்தப்பட்டு மின்சார டிராம் ரயில்கள் 1895ம் ஆண்டு அறிமுமாகின.
பயந்து வருதே...
மின்சாரத்தில் டிராம் ரயில்கள் இயங்கியதால் மக்கள் அதில் ஏறவே பயந்தனர். ஷாக் அடித்து விடுமோ என்ற அச்சம்தான் இதற்குக் காரணம். இதனால் ஆரம்பத்தில் இலவசமாக மக்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்டாப் ஸ்டாப்...
காலப்போக்கில் பல்வேறு போக்குவரத்து வசதிகள் வந்து விட்டதாலும், நடைமுறை சிக்கல்கள் வந்ததாலும் டிராம் ரயில் சென்னையில் தனது 80 ஆண்டு கால சேவையை நிறுத்திக் கொண்டது.
மறுபடியும் டிராம் டிராம்
இந்த நிலையில் மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் டிராம் சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.
மத்திய அரசே முழுச் செலவும்
மத்திய அரசே இதற்கான முழுச் செலவையும் ஏற்கவுள்ளது. அதேசமயம், மாநில அரசின் ஒத்துழைப்பும் கோரப்படுமாம்.
இதர பகுதிகளிலும்
தமிழகத்தைப் போலவே இந்தியாவின் பிற முக்கிய இரண்டாம் நிலை நகரங்களிலும் டிராம் சேவை தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது.