டெங்கு: தமிழக அரசு அலட்சியமாக இருந்ததா? என ஆய்வு- மத்திய குழு
டெங்குவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியமாக இருந்ததா என ஆய்வு செய்யப்படும் என மத்திய குழு தெரிவித்துள்ளது.
சென்னை: டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியமாக இருந்ததா? என ஆய்வு செய்யப்படும் என சென்னை வந்துள்ள மத்திய குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இறப்புகள் அதிகரித்துள்ளதையடுத்து டாக்டர்கள் அசுதோஷ் பிஷ்வாஸ், சுவாதி துப்லிஸ் மற்றும் கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கர்க் ஆகியோர் அடங்கிய மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இன்று தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான குழுவுடன் முதல் கட்டமாக மத்திய குழு ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் டாக்டர் அசுதோஷ் பிஷ்வாஸ் கூறியதாவது:
டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியமாக இருந்ததா? என்பது குறித்து ஆராயப்படும். டெங்கு நோயாளிகள் இறப்புக்கு என்ன காரணம் என்பதும் குறித்து ஆய்வு செய்யப்படும்.
டெங்குவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இவ்வாறு அசுதோஷ் பிஷ்வாஸ் கூறினார்.