மீனவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: நிர்மலா சீதாராமன்
தமிழக மீனவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர் படுகொலைக்கு உரிய நியாயம் கிடைக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவை நடுக்கடலில் கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். இதில் மற்றொரு மீனவர் சரோன் படுகாயம் அடைந்தார்.
இப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும் நீதி கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து 6 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது என்று மத்திய அரசு உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் அதுவரை பிரிட்ஜோவின் உடலை வாங்க மாடோம் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மாலா சீதாராமன் இன்று தங்கச்சிமடத்திற்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். படுகொலை செய்யப்பட்ட பிரிட்ஜோவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
மீனவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும். இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு மீனவர் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும்.
தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார். மீனவர் கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவிப்பேன்.
மீனவர் படுகொலைக்கு உரிய நியாயம் கிடைக்க அனைத்து நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மத்திய அரசு நடிவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.