புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை ரத்துக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை
புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை ரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், 3 தனியார் மருத்துவ கல்லூரிகளும் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளுக்கு மாறாக கடந்த 2016-17-ஆம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த புகாரின் பேரில் 778 மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்தது. இதை எதிர்த்து மாணவி திவ்யா உள்பட 108 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் தாங்கள் எவ்வித விதிமுறைகளையும் மீறவில்லை என்றும், தாங்கள் மருத்துவ படிப்பில் தொடர உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர். மேலும் தாங்கள் சேர்க்கப்பட்ட ஓராண்டு கழித்தே இத்தகைய ரத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ரவிசந்திர பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது 778 மாணவர்களின் மருத்துவ சேர்க்கை ரத்துக்கு வரும் அக்டோபர் 23-ஆம் தேதி இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மாணவர்களின் மனுவுக்கு புதுவை அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.