தீபாவளி பட்டாசால் சென்னையில் பல மடங்கு காற்று மாசு.. டாப் ஏரியா எது தெரியுமா?
தீபாவளிக்கு சென்னையில் அதிக அளவில் பட்டாசு வெடித்தத்தில் காற்று கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக மாசடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னையில் வழக்கத்தை விட தீபாவளியன்று பட்டாசுப் புகையால் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று கொண்டாடப்பட்ட தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். ஆனால் நேற்று இரவு முதலே பட்டாசுப் புகையால் சென்னையை புகை மண்டலம் சூழ்ந்தது. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசினால் மிக அதிக அளவில் காற்று மாசடைந்துள்ளதாகக் கூறியுள்ளது. திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், சவுக்கார்பேட்டையில் காற்று மாசு குறித்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் திருவல்லிக்கேணியில் ஒரு கனமீட்டருக்கு 597 மைக்ரான் அளவிற்கு காற்று மாசடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதே போன்று
பெசன்ட் நகரில் 387, நுங்கம்பாக்கத்தில் 541, சவுகார்பேட்டையில் 777, தி.நகரில் 529 மைக்ரான் அளவிற்கு காற்று மாசடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
காற்றில் 0 முதல் 50 மைக்ரான் அளவு மைக்ரான்கள் இருந்தால் மட்டுமே மாசு ஏற்படாது, ஆனால் நேற்று ஒரே நாளில் இது மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் பட்டாசு வெடித்ததில் இருந்து கிளம்பிய நுண்துகள்கள் வளி மண்டலத்தில் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், அவை மீண்டும் பூமிக்குத் திரும்பும் போது சுவாசப் பிரச்னை, நுரையீரல் பாதிப்பு பிரச்னை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
காற்று மாசு போல பட்டாசின் சப்தத்தால் ஒலி மாசும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காற்று மாசு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதால் டெல்லியைப் போல சென்னையிலும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு பட்டாசு வெடிக்கும் வாய்ப்பு சென்னைவாசிகளுக்கு கிடைக்காமல் போவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.