சென்னைக் கட்டிட விபத்து: 11 பேரை உயிருடன் மீட்க உதவிய ஜாக், ஜூலி, ஜான்சி, ஜீனா...
சென்னை: சென்னையில் இடிந்து விழுந்து தரைமட்டமான 11 மாடிக் கட்டிடத்திலிருந்து, 11 பேர் உயிருடன் மீட்கப் பட்டதில் மோப்ப நாய்களின் பங்கு இன்றியமையாதது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் பெய்த இடியுடன் கூடிய திடீர் மழையில் போரூர் மவுலிவாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அக்கட்டிடத்தின் தரைத் தளத்தில் தங்கியிருந்த கட்டிட தொழிலாளர்கள் 42 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அவசரத்தில் நடந்து வருகிறது. கட்டிட இடிபாடுகளில் இருந்து துர்நாற்றம் வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே கட்டிட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப் பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 11 பேரை மீட்க மோப்ப நாய்கள் பேருதவி புரிந்தது தெரிய வந்துள்ளது.
5 மோப்ப நாய்கள்...
சென்னை கட்டிட விபத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தீயணைப்பு வீரர்கள் 5 மோப்ப நாய்களையும் மீட்பு பணியில் ஈடுபடுத்தினர்.
தேடுதல் வேட்டை...
மிகவும் குறுகலான இடிபாடுகளுக்கிடையே ஆட்கள் உள்ளனரா என்பதை கண்டறிய மீட்புக் குழுவினருடன் மோப்ப நாய்களும் தெடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
மோப்ப நாய்களின் உதவி...
இதுவரை நடந்த மீட்பு பணியில் ஜாக் என்ற மோப்ப நாய் 3 பேரை உயிருடனும், ஒருவரை இறந்த நிலையிலும், ஜீனா என்ற நாய் 2 பேரை உயிருடனும், 2 பேரை இறந்த நிலையிலும், ஓரி என்ற நாய் 2 பேரை உயிருடனும், ஒருவரை இறந்த நிலையிலும், ஜூலி என்ற நாய் 2 பேரை உயிருடனும், ஜான்சி என்ற நாய் 2 பேரை உயிருடனும் மீட்டுள்ளனர்.
15 பேர்...
ஆக மொத்தம் 11 பேரை உயிருடனும், 4 பேரை இறந்த நிலையிலும் மீட்க மோப்பநாய்கள் பேருதவி செய்துள்ளன.
மாஸ்க்...
5வது நாளாக தொடர்ந்து நடைபெறும் மீட்புப் பணி நடந்து வருகிறது. இடிபாடுகளுக்கிடையே துர்நாற்றன் வீசுவதால் இதனால் மீட்பு குழுவில் உள்ளவர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பு ஊசிகள்...
மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க அடிக்கடி தடுப்பு ஊசிகள் மற்றும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மருத்துவ குழுவினர் அதிகளவில் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.